விவசாயிகளை விடாத கருப்பு-இல.கணேசன் பாய்ச்சல்
சென்னை: சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்துகிறேன் என்ற பெயரில் தமிழக அரசு பெருந்துறை பகுதி விவசாயிகளை தொடர்ந்து விடாது கருப்பு போல் விரட்டி வருகிறது என தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிப்காட் தொழிற்பேட்டை இயங்கி வருகிறது. இந்த தொழிற்பேட்டை அமைக்க ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட இடங்களை அரசு முழுமையாக பயன்படுத்தி வருகிறதா என்பதே ஆய்வுக்குரிய விஷயம்.
இங்கிருந்து வெளியேறும் கழிவுகளை சுத்திகரித்து, கடலுக்கு செலுத்துகின்ற திட்டம் தொடர்பாக இதுவரை மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால், தற்போது சிப்காட் தொழிற்பேட்டையை விரிவாக்குவதாக கூறி கம்புளியம்பட்டி கிராமத்தில் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த முயற்சித்துள்ளது.
இதனால் இங்கு வசிக்கும் சுமார் ஆயிரம் விவசாய குடும்பங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இவர்கள் அனைவரும் சிறு விவசாயிகள்.
இது தவிர இப்பகுதியில் சுமார் 47 விசைத்தறி கூடங்களில் 2,700 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நில கையகப்படுத்துதல் காரணமாக இவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் தற்போது கம்புளியம்பட்டி கிராமத்தில் இருக்கும் இவர்கள் இதற்கு முன்னதாக தற்போது சிப்காட் இருக்கும் பகுதியில் குடியிருந்தவர்கள்.
அந்த நிலத்தை அரசு பறித்து கொண்டதை அடுத்து இவர்கள் இங்கு வந்து குடியேறி விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் அரசு 'விடாது கருப்பு' போல தொடர்ந்து விரட்டி வருகிறது.
எனவே, இந்த கையகப்படுத்தும் திட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். தொழில் வளர்ச்சி தேவை. அது எந்த வகையிலும் அடுத்த துறையின் வளர்ச்சியை பாதிக்க கூடாது என அறிக்கையில் இல.கணேசன் கூறியுள்ளார்.