ஏழரை சனி முடிந்து விட்டது-திமுகவில் சேருவேன்: எஸ்.வி.சேகர்
சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார் எஸ்.வி.சேகர். இந்த நிலையில், தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனிபகவான் கோவிலுக்கு நேற்று எஸ்.வி.சேகர் வந்தார்.
சனீஸ்வரரை வணங்கி விட்டு செய்தியாளர்களைச் சந்தித்த சேகர் கூறுகையில்,
என்னை பிடித்திருந்த ஏழரை சனி தற்போது முடிவுக்கு வந்துள்ளதால் குச்சனூர் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்ய வந்தேன். கட்சி ரீதியாக நான் அதிமுகவில் இணைந்த போது எனக்கு ஏழரை சனி தொடங்கியது. தற்போது முடிந்து விட்டதால் அக்கட்சியில் இருந்தும் விலகி விட்டேன். இனி திமுக அரசுக்கு முழு ஆதரவு அளிப்பேன்.
தேவையில்லாமல் மயிலாப்பூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வேண்டியதில்லை. ஒரே நேரத்தில் அதிமுக சார்பில் வாக்களித்த பொதுமக்களுக்கும், திமுகவை சேர்ந்த வர்களுக்கும் நான் எம்.எல்.ஏவாக இருப்பது மிகவும் சந்தோசமாக உள்ளது.
அதிமுகவில் இருந்து நானாக விலகவில்லை. கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என்னை நீக்கினார். இருந்தாலும் எனக்கும், எஸ்.எஸ்.சந்திரனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் என்பதால் நான் ஒதுங்கிக் கொண்டேன்.
இந்தியாவில் வெற்றிகரமாக செயல்படுவது கருணாநிதி ஆட்சி மட்டும் தான். அந்த நல்லாட்சி தொடர்வதால் திமுகவில் இணைவதில் உறுதியாக உள்ளேன். எனக்கென்று எதிரிகள் யாரும் இல்லை. என்னை எதிர்ப்பவர்களை சனி பகவான் பார்த்துக் கொள்வார் என்றார் சேகர்.