'கருணாநிதியும் திசைதிருப்பலும்'-நெடுமாறன்
சென்னை: தமிழர்களின் கோபத்துக்கும், வெறுப்புக்கும் ஆளாகும் ஒவ்வொரு முறையும் தனது உயிருக்கு ஆபத்து என கூக்குரல் எழுப்பி திசைதிருப்ப முயல்வது முதல்வர் கருணாநிதிக்கு கைவந்த கலையாகும் என நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது அவர் வெளியிட்ட அறிக்கையில்,
வன்னி வதை முகாம்களில் உள்ள 3 லட்சம் தமிழர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் உயிருக்கு ஆபத்துஎன்று ஓலமிடும் முதல்வர் கருணாநிதியின் செயலால் உலகத் தமிழர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
அதனை சுட்டிக்காட்டியதற்காக என் மீது பாய்கிறார். குண்டர் சட்டத்தைக் காட்டி மிரட்டுகிறார்.
தமிழர்களின் கோபத்துக்கும், வெறுப்புக்கும் ஆளாகும் ஒவ்வொரு முறையும் தனது உயிருக்கு ஆபத்து என கூக்குரல் எழுப்பி திசைதிருப்ப முயல்வது முதல்வர் கருணாநிதிக்கு கைவந்த கலையாகும்.
ஐநா அதிகாரி லின் பாஸ்கோ அகதி முகாம்களை நேரில் பார்வையிட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளார்.
ஆனால் முதல்வர் கருணாநிதி தில்லிக்கு கடிதம் எழுதுவதும், பிரதமர் சார்பில் அதிகாரிகள் இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதுவதுமான நாடகம் தொடர்கிறதே தவிர ஈழத் தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கவில்லை.
இதுபோன்ற நாடகங்களை எல்லாம் நிறுத்திவிட்டு முகாம்களில் உள்ள தமிழர்களை மீட்பதற்கு உண்மையான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை மீது பொருளாதார தடை...
தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஐநாவில் இந்தியா கொண்டு வரவேண்டும். அப்போதுதான் இந்திய அரசின் மீது தமிழர்களுக்கு நம்பிக்கை பிறக்கும் என அறிக்கையில் நெடுமாறன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications