சிதம்பரம் கோவிலை 'மீட்க' வி.எச்.பியின் பஞ்சரட்ச மந்திரம் ஓதும் போராட்டம்!
சிதம்பரம்: தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை மீட்க கோவில் மீட்பு இயக்கம் தொடங்கப்படும் என்று விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது.
சமீபத்தில் தீட்சிதர்களிடமிருந்து அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு விஎச்பி தலைவரான அசோக் சி்ங்கல் இன்று வந்தார்.
அவருக்கு தீட்சிதர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய சிங்கல், நடராஜர் கோவிலை மீட்க பஞ்சரட்ச மந்திரம் ஓதும் போராட்டம் நடத்தப்படும். அதே போல அரசு எடுத்துக் கொண்ட எல்லா கோவில்களையும் மீட்க கோவில் மீட்பு இயக்கம் தொடங்கப்படும் என்றார்.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு-சு. சாமி:
சிங்கால் வருகையையொட்டி நடராஜர் கோவிலுக்கு வந்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி நிருபர்களிடம் கூறுகையில்,
சிதம்பரம் நடராஜர் கோயில் பாரம்பரியமிக்கது. கோயில் தொடர்பாக தற்போது தோல்வி ஏற்பட்டுள்ளது. தோல்வி தான் வெற்றிக்கு முதல்படி என பல இதிகாசங்கள் கூறுகின்றன.
இந்தியாவில் 83 சதவீதம் பேர் இந்துக்களாக உள்ளனர். அவர்களுடைய சக்தியை யாரும் அழிக்க முடியாது.
சிதம்பரம் கோயில் விஷயத்தில் தமிழக அரசின் சதித் திட்டத்தை முறியடித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி பெறுவோம். அந்த வழக்கில் நானே ஆஜராகி வாதாடுவேன் என்றார்.