ஜாக்கிரதையாக பேச வேண்டும் - தரூருக்கு காங். அறிவுரை
டெல்லி: இனிமேல் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூருக்கு காங்கிரஸ் கட்சி அறிவுரை வழங்கியுள்ளது.
விமானங்களில் உள்ள எகானமி வகுப்பை மாட்டுத் தொழு வகுப்பு என்று ட்விட்டர் மூலம் செய்தி அனுப்பி பெரும் சர்ச்சைக்கு ஆளானார் சசி தரூர். இதனால் காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தி அடைந்தது.
சசி தரூரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என அசோக் கெலாட் உள்ளிட்டோர் போர்க்கொடி உயர்த்தினர்.
இந்த நிலையில் லைபீரியா சென்றிருந்த தரூர் நேற்று டெல்லி திரும்பினார். பின்னர் சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
அப்போது மக்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தும்படியான பேச்சுக்களை இனிமேல் தவிர்க்க வேண்டும். விளையாட்டுக்குக் கூட இதுபோல பேசக் கூடாது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். மிகவும் ஜாக்கிரதையாக பேச வேண்டும், எழுத வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு அறிவுரை கூறினராம்.