மும்பையில் கொடூரம்- தமிழ்ப் பெண் கற்பழித்து எரித்துக் கொலை
மும்பை: மும்பையில் 24 வயது தமிழ்ப் பெண்ணை நான்கு பேர் கொண்ட கும்பல் கொடூரமாகக் கற்பழித்து அவரை எரித்துக் கொன்று விட்டனர்.
மும்பையின் அன்டாப் ஹில் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்தவர் நதியா (25). இவர் ராஜு என்பவரைக் காதலித்து வந்தார். ஆனால் அவரது வீட்டினர் கட்டாயப்படுத்தி டாக்சி டிரைவரான ராஜா என்பவருக்கு கட்டி வைத்து விட்டனர்.
திருமணத்திற்குப் பின்னர் ராஜுவை மறந்து ராஜாவுடன் வாழ ஆரம்பித்தார் நதியா. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.
இந்த நிலையில் தன்னை நதியா மறந்து விட்டதால் ஆத்திரமடைந்த ராஜு, அவரைப் பழிவாங்க திட்டமிட்டார்.
தனது சகோதரர்கள் ராஜேஷ், குமார் மற்றும் நண்பர் சங்கர் ஆகியோருடன் வீட்டில் தனியாக இருந்த நதியாவிடம் சென்றனர். அங்கு கத்தி முனையில் நான்கு பேரும் நதியாவைக் கற்பழித்துள்ளனர்.
அதன் பின்னர் நதியாவை அப்படியே விட்டால் ஆபத்து எனக் கருதி, மண்ணெண்ணை ஊற்றி தீவைத்தனர். இதில் உடல் கருகி அலறினார் நதியா.
அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து நதியாவை மீட்டு செவ்வாய்க்கிழமை சியான் மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மரணமடைவதற்கு முன்பு போலீஸாரிடம் ராஜு உள்ளிட்ட நால்வர்தான் தன்னைக் கற்பழித்து, எரித்து விட்டதாக வாக்குமூலம் அளித்தார் நதியா.
இதையடுத்து நான்கு பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
உயிரிழந்த நதியா சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.