நிலவில் நீர் படலம்- கண்டுபிடித்த சந்திரயான்!
டெல்லி: இந்தியாவின் முதலாவது நிலவு விண்கலமான சந்திரயான்-1, தனது சேவையை துண்டித்துக் கொள்வதற்கு முன்பாக, நிலவின் தளத்தில் தண்ணீர் படலம் இருப்பதை கண்டுபிடித்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது.
சந்திரயான் விண்கலத்தில் இருந்த நாசாவின் மூன் மினராலஜி மேப்பர் (எம்3) என்ற சாதனம்தான் இதை புகைப்படம் எடுத்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி சந்திரயான் நிலவுக்கு அனுப்பப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 30ம் தேதியுடன் அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
சந்திரயான் விண்கலத்தின் முக்கிய நோக்கமே நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பதை கண்டவறிவதுதான். அந்த மிக முக்கிய நோக்கம் தற்போது நிறைவேறியிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து சந்திரயான்-1 திட்ட இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், மிக மிக திருப்தியாக உள்ளது. நிலவில் தண்ணீர்ப் படலம் இருப்பதை சந்திரயானில் இடம் பெற்றிருந்த நாசாவின் எம்3 புகைப்படம் எடுத்துள்ளது.
சந்திரயான்-1 விண்கலத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று தண்ணீர் இருப்பதைக் கண்டறிவது. அது நிறைவேறியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
மூன் மேப்பர் மூலம் தெரிய வந்துள்ள இன்னொரு முக்கிய கண்டுபிடிப்பு என்னவென்றால், நிலவில் தொடர்ந்து தண்ணீர் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான்.
இந்த அபாரமான கண்டுபிடிப்பு குறித்து இன்று நாசா முறைப்படி செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கவுள்ளது.
நிலவில் தண்ணீர் இருப்பது குறித்து இதுவரை நாசாவும் சரி, இஸ்ரோவும் சரி கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தன. இந்த நிலையில் மயில்சாமி அண்ணாதுரை மூலம் இது தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த அரிய கண்டுபிடிப்பு குறித்து பிரவுனன் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இது மிகப் பெரிய கண்டுபிடிப்பு, மிகப் பெரிய விஷயம். சந்திரயானின் மிகப் பெரிய சாதனையாகும் இது. இந்தியாவின் விண்வெளித் திட்டம் மிகப் பெரிய உச்சத்தை எட்ட இது உதவும் என்றார்.
சந்திரயானின் இந்த மிகப் பெரிய கண்டுபிடிப்பு குறித்து இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறுகையில், மிகப் பெரிய அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். நிச்சயம் அது மிகப் பெரிய விஷயமாக இருக்கும். அதற்கு மேல் சொல்வதற்கு இல்லை என்றார்.
நிலவில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அதிக அளவில் இனி நிலவுக்கு விண்கலங்கள் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பூமியைத் தவிர வேறு கிரகங்களில் உயிரினங்கள் வாழ முடியுமா என்ற ஆய்வும் இனி சூடு பிடிக்கும்.
மேலும், நிலவுக்கு விண்வெளி வீரருடன் கூடிய விண்கலத்தை அனுப்பும் இந்தியாவின் கனவை நனவாக்கும் நடவடிக்கைகளும் முடுக்கி விடப்படும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.












Click it and Unblock the Notifications