படிப்பில் என்ன 'ரகசியம்' கொட்டிக் கிடக்கிறது?
திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஊழல் ஏதும் நடக்கவில்லை என்று துணைவேந்தர் பொன்னவைக்கோ கூறியுள்ளார்.
பொன்னவைக்கோ மீது பல ஊழல், லஞ்சம், முறைகேடுகள் எழுந்துள்ளன. இது குறித்து விசாரிக்க பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான சுர்ஜித் சிங் பர்னாலா அனுமதி வழங்கியுள்ளார்.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய பொன்னவைக்கோ,
நான் துணைவேந்தராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 2 ஆண்டு காலத்தில் என் மீது எந்தப் புகாரும் வந்தில்லை.
இப்போது ஊழியர் நியமனம், கட்டிடம் கட்டியதில் முறைகேடு, பொருட்கள் வாங்கியதில் முறைகேடு என்கிறார்கள். நான் ஏன் முறைகேடு செய்ய வேண்டும், ஏன் ஊழல் செய்ய வேண்டும்.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் தானே அதைச் செய்ய வேண்டும். எனக்கு போதிய பணம் இருக்கிறது. ஊழல், முறைகேடு என்பது எனது அகராதியிலேயே கிடையாது.
பேராசிரியர் பணியிடங்கள் 5 வருடங்களாக காலியாக இருந்தன. அதனால் தான் முறைப்படி விளம்பரம் கொடுத்து 69 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களைக் கூட நான் தேர்வு செய்யவில்லை. யூ.ஜி.சி செலக்ஷன் கமிட்டி தான் தேர்வு செய்தது. பல்கலைக்கழகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக பர்ச்சேஸ் கமிட்டி உள்ளது.
கம்ப்யூட்டர் உள்பட பல்கலைக்கழகத்துக்குத் தேவையான எல்லா பொருட்களையும் வாங்கியது இந்த கமிட்டி தான். இது தொடர்பான எல்லா ஆவணங்களும் உள்ளன. யார் வேண்டுமானாலும் அதை பார்த்துக் கொள்ளலாம் என்றார்.
மும்பையில் உள்ள இந்தப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி மையத்தில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளதே என்று கேட்டதற்கு,
ஒரு மாணவர் மட்டுமே அப்படி புகார் மனு அனுப்பியிருந்தார். அதிக கட்டணம் வாங்கி இருந்தால் அதை உடனே திருப்பிக் கொடுக்குமாறு உத்தரவிட்டேன். இதுபற்றி விசாரிக்க கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலத்தில் இதன் அறிக்கை தாக்கல் ஆகும். முறைகேடு நடந்ததாக நிரூபிக்கப்பட்டால் அந்த மையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்களே என்று கேட்டதற்கு,
மாணவர்கள் தாங்களாக அந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. அதை வெளியில் இருந்து தூண்டிவிட்டனர். நான் மாணவர்களுடன் பேச்சு நடத்தி மாணவர்கள் தெரிவித்த 52 கோரிக்கைகளும் வரும் 26ம் தேதிக்குள் நிறைவேற்ற உத்தரவாதம் தந்துள்ளேன் என்றார்.
பல்கலைக்கழகங்களில் நடக்கும் பெரும்பாலான முறைகேடுகளுக்கு முக்கிய காரணமாக விளங்குவது 'அபீசியல் சீக்ரட்ஸ் ஆக்ட்' என்ற அரதப் பழமையான ஒரு விதி தான் ன்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டத்தின்படி பல்கலைக்கழகங்களின் செனட் எடுக்கும் முடிவுகள் குறித்து யாருக்கும் விளக்கம் தர வேண்டியதி்ல்லை.
ராணுவத்துக்கும், உளவுப் பிரிவுக்கும் மட்டுமே தேவைப்படும் இந்த சட்டத்திலிருந்து பல்கலைக்கழகங்களை விடுவித்து, அவை வெளிப்படையாக இயங்க வைத்தாலே.. பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
பல்கலைக்கழகங்களின் திருட்டுத்தனத்தை மறைக்கவே இந்த விதி உதவுகிறது. எனவே இந்த ரகசிய காப்பு சட்டத்தை தூர எறிவது மிக மிக அவசியமாகிறது.
படிப்பில் என்ன 'ரகசியம்' கொட்டிக் கிடக்கிறது?.
ரகளை-சின்டிகேட் கூட்டம் ரத்து:
இந் நிலையில் இன்று நடந்த பல்கலைக்கழக சின்டிகேட் கூட்டத்தில் உறுப்பினர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். துணைவேந்தர் பொன்னவைக்கோ தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அவர் மீது உறுப்பினர்கள் சரமாரியாக ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறினர்.
நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்ததால் சிண்டிகேட் கூட்டம் வரும் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.












Click it and Unblock the Notifications