தங்கக்காசு மோசடி- தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது!
விழுப்புரம்: தங்கக்காசு என கூறி போலியான தங்கத்தை கொடுத்து ரூ. 26 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 4 பேரை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் திருவள்ளுவர் சாலை ஆர்ஆர் மருத்துவமனை எதிரில் மொபைல் போன் கடை நடத்தி வருபவர் அபீப் ரகுமான். இவரது வாடிக்கையாளர் சென்னை சீனு என்பவர் சமீபத்தில் புதுச்சேரியில் குறைந்த விலைக்கு தங்ககாசு கிடைப்பதாக கூறினார்.
இதை கேள்விப்பட்ட அபீப் ரகுமான், புதுச்சேரி எல்லையை ஒட்டிய அமணங்குப்பம் கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரிடம்தங்க காசு வாங்கினார்.
பின்னர் கடந்த 9ம் தேதி மீண்டும் தங்க காசு வாங்குவதற்காக அவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளிகுப்பம் கிராமத்துக்கு தனது நண்பர்கள் பாலமுருகன், வேல்முருகனுடன் சென்றார்.
அங்கு தர்மலிங்கத்திடம் ரூ. 26 லட்சம் கொடுத்து தங்க காசு வாங்கினார். அப்போது தர்மலிங்கம் போலியான காசுகளை கொடுத்து அவர்களை ஏமாற்றியுள்ளார். இந்த விவரத்தை சற்று தாமதமாக அறிந்து கொண்ட அபீப் ரகுமான் விக்கிரவாண்டி போலீஸில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் அமணங்குப்பம் தர்மலிங்கம், அருணாசலம் அவரது மகன் சீத்தாராமன் உட்பட ஏழு பேர் கும்பலை தேடி வந்தனர்.
இந்நிலையில் அருணாசலம் (60), சீத்தாராமன் (22) மற்றும் மேல்சாத்தமங்கலம் ஆறுமுகம் (60) ஆகியோரை கைது செய்தனர்.
தலைமறைவாக இருக்கும் தர்மலிங்கம் உள்ளிட்ட நான்கு பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications