தூத்துக்குடி அருகே பாதிரியாருக்கு கொலை மிரட்டல்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பாதிரியார் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டயோசீசன் தேர்தல் நடந்தது.
இதில் சாத்தான்குளத்தை சேர்ந்த குணசீலன் தங்கதுரை என்பவர் போட்டியிட்டார். ஆனால், சாத்தான்குளம் சிஎஸ்ஐ ஆலய பாதிரியராக இருக்கும் டேவிட் ஞானைய்யா என்பவர் தேர்தலின் போது அவருக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளார்.
ஆனால், குணசீலன் தங்கதுரை தேர்தலில் வெற்றி பெற்று டயோசீசன் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் ஆத்திரமடைந்த குணசீலன் உறவினர் நாசரேத் லக்வின் என்பவரின் மகன் டேவின் மற்றும் இன்னொருவரும் சேர்ந்து டேவிட் ஞானைய்யாவுக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் நாசரேத்தில் இருந்து காரில் சாத்தான்குளத்திற்கு திரும்பி கொண்டிருந்த டேவிட் ஞானய்யாவை பாறைவிலக்கு பகுதியில் வழிமறித்தனர்.
அப்போது அவர்கள் டேவிட் ஞானையாவிடம் டயோசீசன் தேர்தலில் எப்படி குணசீலனுக்கு எதிராக செயல்படலாம் என வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும் கார் மீது கல்வீசியுள்ளனர். பின்னர் அவரை கொலை செய்துவிடுவதாக கூறிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து டேவிட் ஞானையா சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ அன்புகரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.