கேரள அணைக்கு அனுமதி: கருணாநிதி எச்சரிக்கையால் ஜெய்ராம் ரமேஷ் பல்டி
முல்லை பெரியாறு அருகே புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை, கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் என்.கே.பிரேமச்சந்திரன் மற்றும் கேரள எம்.பி.க்கள் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்கள்.
கேரள அரசு புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ள பகுதி, பெரியார் புலிகள் வனச்சரணாலயப் பகுதியின் கீழ் வருவதால், அந்த இடத்தில் அணை கட்டுவதற்கும், ஆய்வு செய்வதற்கும், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் கீழ் உள்ள தேசிய வனஉயிரின வாரியம்தான் அனுமதி அளிக்க வேண்டும்.
கடந்த வாரம் இந்த வாரியத்தின் நிலைக்குழுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு அனுமதி கேட்டிருந்தது உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள பிரச்சினைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த கூட்டத்தில், முல்லை பெரியாறு அருகே புதிய அணை கட்ட ஆய்வு செய்வதற்கு கேரள அரசுக்கு, அனுமதி அளிக்கப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. ஆனாலும், அதிகாரப்பூர்வமாக இது பற்றிய விவரம் வெளியிடப்படவில்லை.
இதைத் தொடர்ந்து, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு, முதல்வர் கருணாநிதி நேற்று ஒரு அவசர எச்சரிக்கைக் கடிதம் அனுப்பினார். தமிழக தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதியும், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
மேலும் மத்திய அமைச்சர் ராசா, ஜெய்ராம் ரமேஷை நேரில் சந்தித்து முதல்வர் கருணாநிதியின் எச்சரிக்கைக் கடிதத்தை நேரிலேயே வழங்கி, இந்த விவகாரத்தில் விளையாட வேண்டாம் என்று கூறியதாகத் தெரிகிறது.
மத்திய அரசின் இந்தச் செயலால் தமிழக மக்களிடையே கொதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராசா தெரிவித்தார்.
இதையடுத்து கேரள அரசுக்கு புதிய அணை கட்ட ஆய்வு செய்ய அனுமதி அளிக்க மாட்டோம் என்று தமிழக அரசிடம் ஜெய்ராம் ரமேஷ் உறுதி அளித்து அதற்கான உத்தரவையும் பிறப்பித்தார்.