ஸ்வைன் எதிரொலி-புனேவில் எச்சில் துப்பினால் ரூ1000 அபராதம்
புனே: பன்றிக் காய்ச்சல் சற்றும் குறையாமல் தொடர்ந்து உயிர்ப் பலியை வாங்கி வருவதால் பொது இடங்களில் எச்சில் துப்ப புனே மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. எச்சில் துப்பினால் ரூ. 1000 அபராதம் கட்ட வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நேற்று வரை பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 25 அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று முதல் அது ரூ. 1000 ஆக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ள புனே மாநகராட்சி ஆணையர் மகேஷ் ஜாட்கே கூறுகையில், ஸ்வைன் ப்ளூ வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. துப்பப்படும் எச்சிலில் எட்டு முதல் 9 மணி நேரம் வரை ஸ்வைன் ப்ளூ வைரஸ் உயிருடன் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனவேதான் பொது இடங்களில் எச்சில் துப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறித் துப்புவோரிடம் ரூ. 1000 அபராதமாக வசூலிக்கப்படும். இந்த உத்தரவை கடுமையாக நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
எச்சில் துப்புவோரைக் கண்டுபிடித்து அபராதம் வசூலிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
பன்றிக் காய்ச்சலுக்கு புனேவில் மட்டும் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications