சேவை செய்ய வாய்ப்பு..மக்களுக்கு நன்றி-பிரதமர்
பிட்ஸ்பர்க்: இன்று 77வது பிறந்த நாளைக் கொண்டாடும் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டுக்கு சேவையாற்ற தனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளதாக உணர்ச்சிவசத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடனை என்னால் எப்போதுமே திருப்பித் தர முடியாது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
பிட்ஸ்பர்க்கில் நடந்த 3வது ஜி-20 மாநாட்டின் நிறைவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், இந்திய மக்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன். அவர்களுக்காகப் பணியாற்ற என்னை அவர்கள் பணித்துள்ளனர். முதல் ஐந்து ஆண்டுகளை நான் அவர்களின் ஆதரவோடு நிறைவு செய்தேன்.
என் மீதான நம்பிக்கையைப் புதுப்பித்து மீண்டும் ஒரு சேவையைப் புரிய எனக்கு அவர்கள் அரிய வாய்ப்பை அளித்துள்ளனர். இது நிச்சயம் என்னால் அவர்களுக்குத் திருப்பித் தர முடியாத கடனாகும்.
இந்தக் கடனை ஓரளவாவது நான் அவர்களுக்குத் திருப்பித் தர வேண்டுமானால், எனது மீதமுள்ள வாழ்க்கையை அவர்களுக்காக அர்ப்பணித்து முழு மனதுடன் சேவை புரிவது மட்டுமே என்றார் மன்மோகன் சிங்.
1932ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி பஞ்சாப் மாநிலம் கா என்ற ஊரில் பிறந்தவர் மன்மோகன் சிங். இந்த கிராமம் தற்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சக்வால் மாவட்டத்தில் உள்ளது.
சோனியா, கருணாநிதி வாழ்த்து
77வது பிறந்த நாளைக் கொண்டாடும் பிரதமருக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications