நீ ஒரு அதிசய ராமன் .. கருணாநிதிக்கு ஜெகத் பாராட்டு
சென்னை: நீயோர் அதிசய ராமன் அதனால் தான் ஒவ்வொரு முறையும் தாடகையை வதம் செய்கிறாய்! உன்னை நன்றாக புரிந்து கொண்டது திருமதி தான்; நிரந்தர முதல்வன் நீ என்பது நிச்சயமாய் தெரிந்ததால்தான் தேர்தல் களத்திற்கே அவர் வருவதில்லை என்று கருணாநிதியைப் பாராட்டுவது போல ஜெயலலிதாவை சாடியுள்ளார் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன்.
அண்ணா விருது பெறும் முதல்வர் கருணாநிதிக்கு ஜெகத்ரட்சகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து வசனக்-கவிதை:
உலகத் தமிழர்களின் ஒற்றைத் தலைவனே! திக்கெட்டும் ஒலிக்கட்டும்- உன் முரசு! தேர்ச் சக்கரத்தில் உலகை வலம் வருகிறான், ஒரு சூரியன்; சக்கர நாற்காலியில் சுழலும் ஒரு சூரியனை உலகமே வலம் வருகிறது!
நீயோர் அதிசய ராமன் அதனால் தான் ஒவ்வொரு முறையும் தாடகையை வதம் செய்கிறாய்! உன்னை நன்றாக புரிந்து கொண்டது திருமதி தான்; நிரந்தர முதல்வன் நீ என்பது நிச்சயமாய் தெரிந்ததால்தான் தேர்தல் களத்திற்கே அவர் வருவதில்லை!
குண்டர்களை வளர்த்ததால் தொலைந்தே போனார்கள்..
நீ தொண்டர்களை வளர்த்ததால் தான் தலைவன் ஆனாய்; மறவர்கள் குண்டர்களை வளர்த்ததால் தொலைந்தே போனார்கள்! உன் விரல்கள் எத்தனை இலக்கியங்களைப் படைத்தால் என்ன? தொண்டர்களின் தவம் உடன்பிறப்பே' எனும் ஒற்றைச் சொல்லுக்காகத் தான்!
மொழிக்காக பெற்ற காயங்களும் இனத்திற்காகப் பெற்ற தழும்புகளும் தாம் உன் வாழ்க்கை- தலைவா!
உன் தழும்புகளுக்காகவே தந்துவிடலாம், எத்தனை முறை வேண்டுமானாலும், தமிழ்நாட்டை!
ஒற்றை விரலைக் காட்டி, அண்ணா சிலையாக நிற்பதன் ரகசியம் என்ன தெரியுமா? தனக்கும் பிறகு தமிழினத்தின் ஒரே தலைவன், நீ தான் என்பதை சூசகமாகச் சொல்வதற்கு அல்லவா?
காற்றைத் தழுவி ஏறும் நம் கட்சிக்கொடி கூட, தியாகம் நிரம்பிய உன் தேகம் தான்! கட்சிக்கொடியின் கறுப்பு என்பது உன் வியர்வை; சிவப்பு என்பது உன் உதிரம்!
சங்கத் தமிழ் ஈன்ற- எங்கள் தங்கத் தலைவனே! இந்தியா பெற்றெடுத்த இன்னுமொரு இமயமே!
தமிழனின் இரண்டு நூற்றாண்டு வரலாற்றைத் தம் வாழ்வென்னும் மைதொட்டு எழுதிவரும் எழிலுருவே!
இந்தியாவின் இதயத்தில் திராவிடத் துடிப்பினை இயக்கி வைத்த இயக்கமே! உன் எழுத்து இறுகிக் கிடந்த தமிழினத்தின் இமைகளைத் திறந்தது- உன் பேச்சு, பூட்டிக்கிடந்த ஊமைத் தமிழனின் உதடுகளைத் திறந்தது! உன் அரசியல், இருண்டு கிடந்த ஏழைத்தமிழனின் விடியலைத் திறந்தது!
பிள்ளைகளை பெற்ற தலைவர்கள் பலர் தரணியில் உண்டு! ஆனால், தலைவர்களை பெற்ற தலைமகன் நீ மட்டுந்தான்! காலம் நின்றுவிட்ட காவியப் பேரறிஞரின் கனவுகளுக்கு உயிர் தந்த கலைஞரே!
ஈரோட்டு நெருப்பெடுத்து காஞ்சி தீபம் ஏற்றி குவலயத்துக்குக் காட்டிய திருக்குவளை கலங்கரை விளக்கமே! அண்ணா விருது காணும் எங்கள் அண்ணலே! சாதிக்கப் பிறந்த சரித்திரம் நீ- நாங்கள் உன் சாதனைகளைப் பாடப் பிறந்த சாமான்யப் புத்திரர்கள்!
வேங்கடத்தானை வேண்டுகிறேன்...
அண்ணா விருது மட்டுமல்ல! அண்ணாந்து பார்த்தால் விண்வரைத் தென்படும் விருதுகள் அனைத்தும் உன் வாசலுக்கு வந்து பல்லாண்டுப் பாட, வேங்கடத்தானை வேண்டுகிறேன்! வாழ்க! பல்லாண்டு என்று கூறியுள்ளார் ஜெகத்ரட்சகன்.












Click it and Unblock the Notifications