விரைவில் ஓய்வாம்.. ஆக்டிங் போடும் சரத்பவார்
சோலாபூர்: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இளைஞர்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 13ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இந் நிலையில் சோலாப்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் 69 வயதான சரத்பவார் பேசுகையில்,
கட்சியில் இளம் தலைவர்களுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்படும். நான் அரசியலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓய்வு பெற போகிறேன்.
எனக்கு வயதாகி கொண்டே போகிறது. தற்போது மக்கள் என்னை தேர்வு செய்து மத்திய அரசு அமைச்சர் பதவி கொடுத்துள்ளனர். இந்த 5 ஆண்டு முடிந்தவுடன் மாநில அரசியலுக்கு திரும்புவேன்.
ஓய்வுக்கு பின் கட்சியின் வழிகாட்டியாக இருப்பேன் என்றார்.
அவருக்கு பின்னர் அவரது தலைமை பதவி தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அவரது மகள் சுப்ரியா சூலேவுக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் தனது வழக்கமான பாராமதி தொகுதியை தனது மகளுக்கு விட்டு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஓட்டுக்காக அனுதாபம் தேடுகிறார்...
தற்போது தேர்தல் நேரம் என்பதால் அனுதாபம் தேடுவதற்காக அரசியலில் இருந்து ஓய்வு என்று சரத் பவார் பேச ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.