நாகை மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல்-நிர்வாணப்படுத்தி சித்ரவதை
நாகப்பட்டிணம்: நாகப்பட்டிணம் மீனவர்களை மீது இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்கி, அவர்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்துள்ளனர்.
நாகப்பட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் கோடிக்கரைக்கு கிழக்கில் இந்திய எல்லை பகுதிக்குள், சேது சமுத்திர திட்டப் பணிகள் நடக்கும் பகுதிக்கு அருகே 19 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அவர்களின் வலைகளை அறுத்தது. பின்னர் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை மீண்டும் கடலுக்குள் வீசியது.
அதோடு நிற்கவில்லை மீனவர்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்துள்ளது. இதையடுத்து அவர்களிடம் உயிர் பிழைத்தால் போதும் என்ற நோக்கத்தில் மீனவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என கரைக்கு திரும்பினர்.
இது தொடர்பாக அவர்கள் நாகப்பட்டிணம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
நேற்று முன்தினமும் இதேபோல் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் நேற்றும் மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டிருப்பதால், விரைவில் இப்பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.