விசாவுக்கு போலி ஆவணம்-சென்னை தொழிலதிபர் கைது
மும்பை: போலியான ஆவணங்களை சமர்ப்பித்து செக் குடியரசு செல்ல விசாவுக்கு விண்ணப்பித்த சென்னை தொழிலதிபரை போலீஸார் கைது செய்தனர்.
46 வயதான சுந்தரம் சுப்பையா என்பவர், தான் ஒரு சினிமா தயாரிப்பாளர் என்றும் வேலு பிலிம்ஸ் என்ற பெயரில் படம் எடுத்து வருவதாகவும், தற்போது 'ஏ பேஸ் டூ ரிமம்பர்' என்ற படத்தின் ஷூட்டிங் நடந்த செக் குடியரசுக்கு இடம் பார்க்கசெல்வதாகவும் கூறி விசாவுக்கு விண்ணப்பித்தார்.
இதையடுத்து செக் குடியரசின் மும்பை துணை தூதரகம் அவரை கடந்த 15ம் தேதி நேர்முகத் தேர்வுக்கு அழைத்தது. அப்போது அவர் தனது பாஸ்போர்ட்டில் மலேசியாவின் முத்திரையை போலியாக குத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், பாஸ்போர்ட்டில் சில இடங்களில் மாற்றம் செய்துள்ளதும் தெரிய வந்தது.
இதை கண்ட செக் குடியரசு துணை தூதரக அதிகாரி, மும்பை கம்தேவி போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். அவரை கைது செய்த போலீஸார் அவர் மீது பித்தலாட்டம், ஏமாற்று வேலை, நம்பிக்கை மோசடி ஆகிய வழக்குகள் பதிவு செய்தது.
இதை தொடர்ந்து போலீஸார் சென்னையில் அவர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் வேலு பிலிம்ஸ் நிறுவனத்தில் 2007ம் ஆண்டு வரை வேலை பார்த்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சொந்த தொழில் துவக்கியுள்ளார்.
போலீஸ் விசாரணையில் சுந்தரம் சுப்பையா கூறுகையில், வேலை தேடி செக் குடியரசுக்கு செல்ல முயற்சித்தேன். அப்போது குமார் என்ற ஏஜென்ட் இப்படி கூறினால் தான் விசா எளிதாக கிடைக்கும் என ஐடியா கொடுத்தார் என்றார்.
இதையடுத்து போலீஸார் தற்போது அந்த ஏஜென்டை தேடி வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் ஏஜென்ட் குமார் இதுவரை பலரையும் போலியான விசா மூலம் மலேசியா, சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications