அணு ஆயுத ஒழிப்பு: இந்தியாவின் நிலைக்கு எல்பராதே பாராட்டு
டெல்லி: அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான இந்தியாவின் நிலை பெரும் பாராட்டுக்குரியது. இதுதொடர்பாக இந்தியா கூறுவதை உலக வல்லரசு நாடுகள் காது கொடுத்துக் கேட்க முன்வர வேண்டும் என சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் தலைவர் முகம்மது எல்பராதே கூறியுள்ளார்.
டெல்லியில் அமைதி பயன்பாட்டில் அணு சக்தி என்ற பெயரில் சர்வதேச மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டு எல்பராதே பேசுகையில், 1948ம் ஆண்டிலேயே அனைத்து அணு ஆயுதங்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்று இந்தியா குரல் கொடுத்தது. இந்தியாவின் இந்த நிலைப்பாடு மிகவும் பாராட்டுக்குரியது. இந்தியா இதுதொடர்பாக சொல்வதை உலக நாடுகள், குறிப்பாக வல்லரசு நாடுகள் காது கொடுத்துக் கேட்க முன்வர வேண்டும்.
அணு ஆயுத ஒழிப்பு பிரசாரத்தில் இந்தியா தலைமை நிலையில் உள்ளது பாராட்டுக்குரியது. அணு ஆயுதமற்ற உலகத்தை உருவாக்குவது நனவாக வேண்டுமானால் அனைத்து நாடுகளும் அதற்கான அடிப்படை நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்க வேண்டும்.
அணு ஆயுதமற்ற பாதுகாப்பு முறைகளை உலக நாடுகள் கடைப்பிடிக்க முன்வர வேண்டும் என்றார் எல்பராதே.