யாழ்ப்பாணம் போலீஸில் மீண்டும் தமிழர்கள்!
கொழும்பு: யாழ்ப்பாணத்திலிருந்து காவல்துறைக்கு தமிழர்களை சேர்க்கலாம் என இலங்கை அரசு காவல்துறைக்கு அனுமதி அளித்துள்ளது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தமிழர்கள் யாழ்ப்பாணம் போலீஸில் இடம் பெற இதன் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது.
யாழ்ப்பாணம் காவல்துறையில் ஏராளமான தமிழர்கள் முன்பு பணியாற்றி வந்தனர். ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக தமிழர்கள் யாரும் காவல்துறையில் சேர்க்கப்படாமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வென்று விட்டதாக கூறி வரும் இலங்கை அரசு தமிழர்களை மீண்டும் யாழ்ப்பாணம் காவல்துறையில் சேர்க்க அனுமதி அளித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் காலியாக உள்ள 500 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என சில நாட்களுக்கு முன்பு இதுதொடர்பாக விளம்பரம் செய்யப்பட்டது. இதையடுத்து 6500 பேர் விண்ணப்பித்துள்ளனராம்.
இலங்கையின் பிற பகுதிகளில் காவலர் தேர்வில் கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகளை விட சற்று கடுமையான விதிமுறைகளை யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிக்கவுள்ளதாம் இலங்கை காவல்துறை.
கசப்புணர்வை வளர்க்கிறது இலங்கை - பான் கி மூன்
இதற்கிடையே, முகாம்களிலேயே தமிழர்களை தொடர்ந்து தங்க வைப்பதன் மூலம் அவர்களுடைய மனதில் கசப்புணர்வை வளர்க்க இலங்கை அரசு துணை போகிறது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார்.
நியூயார்க் வந்த இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகே, பான் கி மூனை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் பான் கி மூன் கூறுகையில், போர் முடிந்து விட்ட நிலையிலும், இன்னும் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருப்போர் சொந்த ஊர்களுக்கு மறு குடியமர்த்தப்படாமல் இருப்பதால் அவர்களது மனதில் துவேஷமும், கசப்புணர்வும்தான் வளரும். இலங்கை அரசின் தாமதம் இத்தகைய உணர்வுகள் ஓங்கி விட வழி வகுத்து விடும்.
முகாம்களில் உள்ளவர்கள் விரக்தி அடைந்து வருகிறார்கள் என்பதற்கு மாணிக் பார்ம் முகாமில் நடந்த தமிழர்கள் போராட்டமும், அதையொட்டி ஏற்பட்ட துப்பாக்கிச் சூடுச் சம்பவமும் ஒரு சான்றாகும்.
மக்களின் நம்பிக்கையைப் பெற ராஜபக்சே அரசு பாடுபட வேண்டும். அந்த கோணத்தில் அது செயலாற்ற வேண்டும். மக்களின் நம்பிக்கையைப் பெற மறு சீரமைப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுவது அவசியம் என்றார்.
அதற்குப் பதிலளித்த விக்கிரமநாயகே, ஜனவரிக்குள் இடம் பெயர்ந்த மக்களை இடம் பெயர வைப்போம் என்று கூறியுள்ள உறுதிமொழியை அரசு கடைப்பிடிக்கும். இலங்கை அரசுக்கு தற்போது சர்வதேச நிதி தேவைப்படுகிறது. குறிப்பாக கணணிவெடிகளை அகற்ற பெருமளவில் உதவி தேவைப்படுகிறது என்றார் அவர்.