வெங்கடேஷ் பண்ணையார் நினைவு ஊர்வலத்தில் கல்வீச்சு-37 பேர் மீது வழக்கு
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே வெங்கடேஷ் பண்ணையார் நினைவு ரத ஏற்பட்ட கலவரத்தில் டிஎஸ்பி வாகனம், அரசு பேருந்து கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டது.
சென்னையில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட வெங்கடேஷ் பண்ணையாரின் 6வது ஆண்டு நினைவு தினம் செப்டம்பர் 26ம் தேதி அனுஷ்டிக்கப்பட்டது.
இதையடுத்து நாடார் பாதுகாப்பு பேரவை சார்பில் தூத்துக்குடி முத்தையாபுரத்திலிருந்து, அவரது நினைவிடம் அமைந்துள்ள அம்மன்புரம் வரை நினைவு ரதம் கொண்டு செல்லப்பட்டது.
அப்போது, ஊர்வலத்தில் சென்றவர்கள் சிலர் ஆட்டோவில் சென்ற பெண்களின் கையைப்பிடித்து இழுத்து, ரகளை செய்துள்ளனர். இந்த தகவலை கேள்விப்பட்ட போலீஸார் ஊர்வலத்தில் சென்றவர்களை எச்சரித்தனர்.
இந்நிலையில் திருச்செந்தூர் அருகேயுள்ள ஆறுமுகநேரி பகுதியில், நாடார் பாதுகாப்பு பேரவையினர் போலீஸார் தங்களை அடித்ததாக கூறி திடீர் சாலை மறியல் செய்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் வாகனத்தை நோக்கி கல்வீச்சில் இறங்கினர்.
இதில் டிஎஸ்பியின் வாகனம், அரசு பேருந்து மற்றும் ஒரு கார் கண்ணாடிகள் உடைந்தன. மேலும் சில போலீஸார் காயமடைந்தனர்.
இதையடுத்து போலீஸார் நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையார், செய்தி தொடர்பாளர் சண்முக பார்த்தீபன், மாநில செயலர் ஓடை செல்வம், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட 37 பேர் மீது ஆறுமுகநேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்களில் திரவியபாண்டி (23), சண்முகநாதன் (29), சத்யராஜ் (22), பாஸ்கரவேல் (22), மாசானபோத்தி (23), தங்கப்பாண்டியன் (32), பெருமாள்ராஜா (40) ஆகிய ஏழு பேரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications