தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும்-வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் இன்று பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தென் மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் வட கிழக்கு பருவமழை காலம் துவங்குவதற்கு முன்பாக தமிழகத்தில் அடிக்கடி லேசான மழை பொழிந்து வருகிறது.
நேற்று முன்தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நேற்றும் இரவில் சென்னையில் லேசான மழை பெய்தது. இன்றும் காலையிலிருந்தே வானம் மப்பும், மந்தாரமுமாக காணப்படுகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை மைய இயக்குனர் ராமன் வெளியிட்டுள்ள செய்தியில்,
இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது. புதுச்சேரியிலும் மழை பெய்யலாம். சென்னையில் சில இடங்களில் தூறல் அல்லது இடியுடன் கூடிய மழை பொழியலாம். வெயில் 35 டிகிரிக்கு மேல் போகாது.
அதேபோல் கேரளாவிலும் ஆந்திராவின் வடக்கு கடலோர பகுதிகளிலும் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என்றார்.
முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து..
இந் நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள தேக்கடி முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.
ஆந்திராவில் கனமழை:
இதற்கிடையே ஆந்திர மாநிலம் கரீம்நகர், குண்டூர், கர்னூல் மாவட்டங்களில் நேற்று கன மழையுடன் மிக பலத்த காற்று வீசியது.
இதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மாவட்டங்களில் இடிதாக்கி 7 பேர் பலியாகினர்.












Click it and Unblock the Notifications