ஆணுறையை சின்னமாக கேட்கும் சுயேச்சை!
அக்டோபர் 13ம் தேதி ஹரியானாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் கர்னால் தொகுதியிலிருந்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் சர்மா.
சர்மா ஒரு சமூக சேவகர் ஆவார். செக்ஸ் தொழிலாளர்களின் நலனுக்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார். எய்ஸ்ட் விழிப்புணர்வு குறித்தும் பாடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தனது தேர்தல் சின்னமாக ஆணுறையை ஒதுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் இதை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டதாம். ஆணுறைக்குப் பதில் வேறு சின்னம் கேளுங்கள் என்று அது கூறியுள்ளதாம்.
ஆனால் இதுகுறித்து மறுப்பு தெரிவித்த கர்னால் தொகுதி தேர்தல் அதிகாரி முகேஷ் அகுஜா கூறுகையில், அப்படி ஒரு கோரிக்கை இதுவரை எங்களுக்குவரவில்லை. மீடியாக்களில் பார்த்துதான் இதைத் தெரிந்து கொண்டோம். தேர்தல் ஆணையம்தான் சின்னத்தை ஒதுக்க முடியும். அதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றார்.
ஆனால் ஆணுறையை சின்னமாக வாங்காமல் ஓயப் போவதில்லை என்கிறார் சர்மா. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் தேர்தல் அதிகாரியை தொடர்ந்து இதுதொடர்பாக வலியுறுத்தி வருகிறேன். கடந்த 2 மாதங்களாகவே ஆணுறையை ஒரு சின்னமாக அறிவிக்க வேண்டும் என மனுக்கள் கொடுத்தபடி உள்ளேன்.
முதலில் ஆணுறையை சின்னமாக சேர்ப்பது குறித்து பரிசீலிப்போம் என்றனர். பின்னர் காத்திருக்கச் சொன்னார்கள். ஆனால் இப்போது ஆணுறையை சின்னப் பட்டியலில் சேர்க்காமல் விட்டு விட்டனர்.
செக்ஸ் தொழிலாளர்களின் அவலத்தையும், எய்ட்ஸ் விழிப்புணர்வையும் மக்களிடம் பரப்பவே இந்த ஆணுறை சின்னத்தை நான் கேட்கிறேன். இதில் என்ன வெட்கம் இருக்கிறது. அரசாங்கமே ஆணுறையை பயன்படுத்துங்கள் என்று விளம்பரம் செய்யும்போது அதைக் காட்டி பிரசாரம் செய்யக் கூடாதா? என்கிறார் கோபத்துடன்.
தனக்கு ஆணுறை சின்னம் கிடைக்காவிட்டால் சட்டரீதியான போராட்டத்துக்கும் தயாராக இருப்பதாக சர்மா தெரிவித்துள்ளார்.