பாதுகாப்பு..அதிமுக பெண் வேட்பாளர்கள் வழக்கு
சென்னை: சென்னை அருகே உள்ள திரிசூலம் பஞ்சாயத்துத் தலைவர் பதவி மற்றும் பல்லாவரம் வார்டு உறுப்பினர் இடைத் தேர்தலில் போட்டியிடும் தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கக் கோரி அதிமுகவைச் சேர்ந்த இரு பெண் வேட்பாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
திரிசூலத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (33), அதிமுகவைச் சேர்ந்தவர். திரிசூலம் பஞ்சாயத்து தலைவர் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இதில், அதிமுக சார்பில் சரஸ்வதி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் அவர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில்,
திரிசூலம் பஞ்சாயத்து தலைவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இடைத் தேர்தல் நடைபெறுகிறது. நான் உட்பட 5 பேர் இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். வருகிற 7ந் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது.
ஏற்கனவே பஞ்சாயத்து தலைவர் கொலை செய்யப்பட்ட நிலையில் திரிசூலம் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. தற்போது எனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும், வேட்பு மனுவை வாபஸ் பெற வேண்டும் என்றும் மிரட்டி எனக்கு மர்ம தொலைபேசி வந்து கொண்டிருக்கிறது.
எனவே தேர்தல் முடியும் வரை எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பளிக்க உத்தரவிட வேண்டும்.
மேலும் வாக்குப்பதிவு முழுவதையும் வீடியோவில் பதிவு செய்ய மாநில தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதேபோல, பல்லாவரம் நகராட்சி 7வது வார்டுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஆர்.சாந்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில்,
தேர்தலில் இருந்து வாபஸ் பெற வேண்டும் என்று கூறி எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. எனவே தேர்தல் முடியும் வரை எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications