எப்போது தீரும் தர்மபுரி மருத்துவ கல்லூரி விவகாரம்?
தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மாணவர்களும் பெற்றோர்களும் கல்லூரியை முற்றுகையிட்டனர்.
கல்லூரி முதல்வர் டாக்டர் கனகசபையை மாணவர்களின் பெற்றோர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் நடப்புக் கல்வியாண்டில் (2009-2010) மாணவர்களை சேர்க்க அகில இந்திய மருத்துவக் கவுன்சில் தடை விதித்தது. இதையடுத்து வழக்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் விளைவாக மாணவர் சேர்க்கைக்கு மிகத் தாமதமாக அனுமதி தரப்பட்டது.
இதையடுத்து மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் சென்னையில் கடந்த சனிக்கிழமை நடந்தது. இதைத் தொடர்ந்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 84 மாணவர்களுக்கு அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.
ஆனால், மத்திய சுகாதாரத் துறை இன்னும் அனுமதி வழங்காததால் மாணவர் சேர்க்கை நடப்பதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
இது தெரியாமல் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த 84 மாணவர்களும் அவர்களது பெற்றோரும் புதன்கிழமை காலை முதல் இரவு வரை கல்லூரி வளாகத்திலேயே காத்திருந்தனர்.
மாணவர் சேர்க்கை தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் புதன்கிழமை மாலை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கல்லூரியை முற்றுகையிட்டு சாலை மறியல் நடத்தப் போவதாக எச்சரித்தனர்.
தன்னை முற்றுகையிட்ட பெற்றோரை முதல்வர் டாக்டர் கனகசபை சமாதானம் செய்தார்.
இந் நிலையில் மத்திய சுகாதாரத்துறையின் அனுமதியைப் பெற தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் சுப்புராஜ் டெல்லி விரைந்துள்ளார்.
மேலும் மாணவர்களைச் சேர்க்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி ச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே. ஜி. பாலகிருஷ்ணனிடம் மீண்டும் முறையிடவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications