இந்தோனேஷியா பூகம்பம்-1000க்கும் மேற்பட்டோர் பலி
ஜகார்தா: இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட பயங்கர பூகம்பத்துக்கு சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருப்பார்கள் என அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தோனேஷிய நேரப்படி நேற்று மாலை 5.16 மணியளவில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 7.6 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
இதன் தாக்கம் சிங்கப்பூரிலும் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலும் உணரப்பட்டது. இதில் சுமத்ரா தீவின் பாடங் பகுதியில் பல கட்டிடங்கள் இடிந்து நொறுங்கின.
இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் உயிரிழந்தனர். சுமார் 100 முதல் 200 பேர் வரை பலியாகி இருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால், மேலும் பல கட்டிடங்களில் மக்கள் நூற்றுக்கணக்கில் சிக்கியிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவர்களும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் அந்நாட்டு சுகாதார துறையின் கீழ் வரும் இயற்கை சீரழிவு மேலாண்மை துறை தலைவர் ரஸ்தம் பகாயா பலி எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியாவில் நிலநடுக்கம்...
இந் நிலையில் இன்று அதிகாலை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மைய பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.1 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
இது ஜனநெருக்கடி மிகுந்த லாஸ் வேகாஸ் நகருக்கு மேற்கே 237 கிமீ தூரத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை