'பாக்-சீனாவை சமாளிக்க மேலும் 50 சுகோய் விமானங்கள் தேவை'!

ரூ. 40,000 கோடி மதிப்பில் 230 சுகோய்-30 ரக விமானங்களை வாங்க ரஷ்யாவுடன் இந்திய ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் தற்போது 105 விமானங்கள் இந்திய விமான படையில் சேர்க்கப்பட்டுவிட்டன.
இந்த 230 விமானங்களில் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் 140 விமானங்களைத் தயாரித்து வருகிறது. அவை வரும் 2015ம் ஆண்டுக்குள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவுக்கு எதிரான ஆயுதங்களாக இந்தியா, சுகோய்-30 போர் விமானம் மற்றும் 3,500 கிமீ தூரம் அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்கும் வல்லமை கொண்ட அக்னி-3 ரக ஏவுகணைகளை ஆகியவற்றையே அதிகம் நம்பியுள்ளது.
வரும் 2011ல் செயல்பாட்டுக்கு வரும் அக்னி 3 ஏவுகணை மூலம் கொல்கத்தா, பாட்னா போன்ற நகரங்களில் இருந்து பெய்ஜிங்கை தாக்க முடியும்.
5,000 கிமீ சென்து தாக்கும் திறன் கொண்ட அக்னி-5 ரக ஏவுகணைகளைத் தயாரிக்கும் பணிகள் தற்போது விரைவாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் இந்திய விமான படையின் தலைவர் ஏர் மார்ஷெல் பி.வி. நாயக் கூறுகையில்,
விமானப் படையில் மேலும் 50 விமானங்களை சேர்ப்பதில் அதிக ஆர்வத்துடன் இருக்கிறோம். எதிர்காலத்தில் சிறப்பாக செயல்பட இது மிகவும் அத்தியாவசியமானது.
சீனாவுடன் மீண்டும் ஒரு 1962 யுத்தம் வருவது சாத்தியமல்ல. இந்தியாவின் எழுச்சியை தக்கவைத்து கொள்ள எதிர்காலத்தில் விமான படையின் வல்லமை நிரூபிக்க சில பகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
வளைகுடா பகுதியில் உள்ள ஹோம்ரஸ் ஜலசந்தி முதல் மலாய்க்கா ஜலசந்தி வரை உள்ள பகுதிகள் தான் நாம் ஆர்வம் கொண்ட புவியியல் பகுதிகள்.
இந்திய விமான படை நவீனமயத்தை நோக்கி முன்னேறி வருகிறது. நம்மிடம் இஸ்ரேலின் 'அவாக்ஸ்' முதல் அமெரிக்காவின் சி 130 ஜே 'சூப்பர் ஹெர்குல்ஸ்' விமானங்கள் வரை பல ரகப்பட்ட விமானங்களும் உள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications