காஷ்மீர் மக்களுக்கு சீனா தனி விசா-இந்தியா கடும் எதிர்ப்பு
டெல்லி: காஷ்மீர் மக்களுக்கு சீனா தனி விசா வழங்கி வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
சீனாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு டெல்லியில் உள்ள சீனத் தூதரகம் தான் விசா வழங்கி வருகிறது. ஆனால் சமீப காலமாக சீனா செல்லும் காஷ்மீர் மாநிலத்தவருக்கு மட்டும் சீனத் தூதரகம் தனி விசா வழங்கி வருவது தெரியவந்துள்ளது.
இந்த விசா வழக்கம்போல் அல்லாமல் தனி தாளில் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் காஷ்மீர் இந்தியாவின் பகுதி அல்ல, காஷ்மீர் மக்கள் இந்தியர்கள் அல்ல என்பதை மறைமுகமாகச் சொல்லும் வகையில் சீனா செயல்பட்டு வருகிறது.
மேலும் அருணாசலப் பிரதேசத்திலிருந்து சீனா செல்லும் இந்தியர்களுக்கும் இதேபோன்று தனி பேப்பரில் விசா வழங்கி வருகிறது சீன. அருணாசலப் பிரதேசம் தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கோரி வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு காஷ்மீர், அருணாச்சல் மாநிலத்தவருக்கு தனி விசா வழங்குவதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இன ரீதியாகவோ, பிராந்திய ரீதியாகேவா இந்தியப் பிரஜைகளுக்கிடையே பாகுபாட்டை சீனா ஏற்படுத்த முயல்வதாக சீனாவிடம் இந்தியா கூறியுள்ளது.
இதுகுறித்து டெல்லி சீனத் தூதரகத்தில் வெளியுறவு அமைச்சககம் தனது புகாரை பதிவு செய்துள்ளது.
இந்திய எல்லைப் பகுதியில் சீனா சமீப காலமாக ஊடுருவலை அதிகரித்துள்ளதோடு இந்தியப் பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ள நிலையில் இந்த விசா சேட்டையில் சீனா ஈடுபட்டுள்ளது.