வெள்ளப் பெருக்கு-குற்றாலத்தில் குளிக்க தடை
குற்றாலம், தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் குற்றாலம் பகுதியில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி கொட்டியது. இதனால் அருவியின் மத்திய பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அருவியின் ஓரமாக நின்று குளிக்க அனுமதி்க்கப்பட்டனர். இதற்காக அருவியின் குறுக்கே கயிறு மூலம் தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
செண்பகாதேவி அருவி, தேனருவி செல்லும் பாதை வெள்ள நீரில் மூழ்கிவிட்டதால் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியின் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் வெள்ளமாக கொட்டியது. கற்கள் விழுவதாலும், தண்ணீர் தெளிவாக இல்லாததாலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
வெள்ளத்தின் காரணமாக ஐந்தருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் தடுப்பு இரும்பு கம்பி உடைந்து அந்தரத்தில் தொங்கியது.
தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாலையிலும் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.