காந்தி ஜெயந்தியன்று மது விற்பனை- 4 பேர் கைது
குற்றாலம்: காந்தி ஜெயந்தியன்று மது விற்ற காரணத்துக்காக நெல்லை மாவட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றாலம் அருகே ஒரு விடுதியில் மது விற்பனை நடந்து வருவதாக தென்காசி மதுவிலக்கு டிஎஸ்பி ஜெயக்குமாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முகமது ஹனிபா, ஏட்டுகள் பேச்சி்முத்து, செந்தில், கு்மார், மூர்த்தி, முருகானந்தம் ஆகியோர் குற்றாலம், செங்கோட்டை சாலையில் உள்ள அந்த விடுதியில் அதிரடி சோதனை போட்டனர்.
அப்போது விடுதியின் வரவேற்பு அறையில் வைத்து விதிமுறைக்கு புறம்பாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. அதையடுத்து விடுதியின் காசாளர் மயிலப்பபுரத்தை சேர்ந்த நேருராஜா, விற்பனையாளர்கள் இலஞ்சி இசக்கிமுத்து, நயினாகரம் குலசேகரவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் விடுதி உரிமையாளர் அருணாசலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
சுரண்டையில் ஒருவர் கைது...
சுரண்டை மேலபட்டார்க்குறிச்சி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். மெயின் பஜாரில் பெட்டிக் கடை வைத்துள்ளார். இவர் கடையில் மது விற்பதாக சாம்பவர் வடகரை போலீசுக்கு தகவல் கிடைத்தது.
தென்காசி டிஎஸ்பி சீனிவாசன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் கிருஷ்ணனின் கடையை சோதனை போட்டனர். அங்கு விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த 167 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கிருஷ்ணனை கைது செய்து செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.