மந்த்ராலய வெள்ளத்தில் சிக்கி அழகிரி உதவியால் மீண்ட 18 தமிழர்கள்
மதுரை: ஆந்திர மாநிலம் மந்த்ராலயம் கோவிலுக்குச் சென்று, அங்கு வெள்ளத்தில் சிக்கி மொட்டை மாடியி்ல் தவித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 18 சுற்றுலாப் பயணிகள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு உதவி கோரி எஸ்.எம்.எஸ். அனுப்பினர். இதையடுத்து அழகிரி ஆந்திர அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அவர்களை மீட்க உதவியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த 18 பேர் மந்த்ராலயம் சென்றிருந்தனர். இந்த நேரமாகப் பார்த்து ஏற்பட்ட பெரும் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
மந்த்ராலயமே நீரினால் சூழப்பட்டதால் அவர்களால் வெளியேற முடியவில்லை. அங்குள்ள ஒரு கட்டடத்தின் மொட்டை மாடியில் அவர்கள் தஞ்சமடைந்தனர். வெளியேறவும், சாப்பிடவும் வழி இல்லாததால் தவித்து வந்த அவர்கள் தங்களது உறவினர்களை செல்போனில் தொடர்பு கொண்டனர்.
பதிலுக்கு அவர்கள், அமைச்சர் அழகிரிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புமாறு தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அறிவுறுத்தினர். மேலும், அழகிரியின் செல்போன் எண்ணையும் வாங்கிக் கொடுத்தனர்.
இதையடுத்து மந்தராலயம் பிருந்தாவன் சத்திரத்தில் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறோம். தயவு செய்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கூறி எஸ்.எம்.எஸ். அனுப்பினர்.
இதையடுத்து ஆந்திர மாநில அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட அழகிரி, தவித்துக் கொண்டிருந்தவர்களை காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார். அதன் பேரில் மீட்புப் படை உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு தவித்துக் கொண்டிருந்த 18 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து மீட்கப்பட்டவர்களில் ஒருவரான துரை கூறுகையில், ஏற்கனவே இதுபோல தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மு.க.அழகிரி உதவியதாக எங்களது உறவினர்கள் கூறியதால் உடனே அழகிரிக்கு நாங்கள் எஸ்.எம்.எஸ் கொடுத்தோம். அதன் பேரில் மீட்புப் படையினர் வந்து எங்களை மீட்டனர் என்றார்.