சென்னையில் தனியாக இருந்த வயதான பெண் படுகொலை
சென்னை: சென்னை வேளச்சேரியில், வீ்ட்டில் தனியாக இருந்த 60 வயதுப் பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் படுகொலைகள் ஏதோ அல்வா சாப்பிடுவது போல படு சகஜமாகி விட்டன. அடுத்தடுத்து நடந்து வரும் கொலைச் சம்பவங்களால் சென்னை மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
இவற்றில் பெரும்பாலானவை ஆதாயத்திற்காக நடப்பவையாக உள்ளன. சமீபத்தில் அனந்தலட்சுமி என்ற பெண்ணும், அவரது மகனும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் போலீஸார் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை நெருங்கவே அவன் கோர்ட்டில் சரணடைந்து விட்டான்.
இந்த நிலையில் வேளச்சேரியில் ஒரு படுகொலை நடந்துள்ளது. பட்டப் பகலி்ல் இந்தக் கொலை நடந்துள்ளது.
நேரு நகர் பாரதியார் தெருவில் வசித்து வந்தவர் மனோன்மணி. 60 வயதான இவரது கணவர் நாகராஜ். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மனோன்மணியுடன், மகன், மருமகளும் சேர்ந்து வசித்து வருகின்றனர்.
நேற்று இருவரும் ரேஷன் கடைக்குப் போயிருந்தனர். வீட்டில் மனோன்மணி மட்டும் தனியாக இருந்தார். அவரது மகனும், மருமகளும் வீடு திரும்பியபோது மனோன்மணி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததைப் பார்த்து திடுக்கிட்டு அலறினர்.
மனோன்மணியின் தலையை சுவற்றில் மோதி கொடூரமாகக் கொன்றுள்ளனர். அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைக் காணவில்லை என்பதும் தெரிந்தது.
இதுகுறித்து வேளச்சேரி போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் மோப்ப நாய் சகிதம் விரைந்து வந்து விசாரணையில் இறங்கியுள்ளனர்.