தமிழர்களை அவமரியாதையாக பேசவில்லை - இலங்கை துணைத் தூதர் பல்டி
சென்னை: இடம் பெயர்ந்தோர் முகாம்கள் விலங்கியல் பூங்கா என்று நான் கூறவில்லை. இந்திய எம்.பிக்கள் குழுவின் வருகையை இலங்கை அரசு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்று பெரிய பல்டியாக அடித்துள்ளார் இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி.
சென்னைக்கு இலங்கை துணைத் தூதராக பதவியேற்றவுடனேயே வம்புடன் தனது வேலையைத் தொடங்கியுள்ளார் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி.
பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், ஆளாளுக்கு வந்து பார்த்துப் போக இடம் பெயர்ந்தோர் முகாம்கள் என்ன விலங்கியல் பூங்காவா என்று கேட்டிருந்தார்.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ. நெடுமாறன், டாக்டர் ராமதாஸ், தா.பாண்டியன், திருமாவளவன் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கிருஷ்ணமூர்த்தியின் பேச்சைக் கடுமையாக கண்டித்துள்ளனர். இந்தியாவை விட்டு அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
இந்த நிலையில் நான் அப்படிப் பேசவில்லையே என்று பல்டி அடித்துள்ளார் கிருஷ்ணமூர்த்தி.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் உண்மையில் என்ன சொன்னேன் என்றால், முகாம்களில் வசிக்கும் மக்கள மரியாதைக்குரியவர்கள். அவர்களை அடிக்கடி சென்று சந்திப்பது, அதுவும் சர்ச்சைகள் நிலவி வரும் நேரத்தில் போய்ச் சந்திப்பது என்பது பொருத்தமானதாக இருக்காது என்றுதான் கூறினேன்.
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதுதான் எனது முதல் பணி, முக்கியப் பணி.
ஏற்கனவே இலங்கைக்கு தூதுக் குழுவை அனுப்புமாறு முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அந்தக் குழுவின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்றார் கிருஷ்ணமூர்த்தி.