புழல் சிறைக்கு குண்டு மிரட்டல்-போலீஸ் சோதனை
சென்னை: சென்னை புழல் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதையடுத்து போலீஸார் சிறை முழுவதும் சல்லடை போட்டு தேடியும் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அது புரளி என முடிவு செய்யப்பட்டது.
சென்னை அருகே இருக்கும் புழல் மத்திய சிறைச்சாலையில் பல்வேறு குற்றங்கள் புரிந்த சுமார் 2 ஆயிரத்து 360 ஆண் மற்றும் பெண் கைதிகள் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் அங்கு தண்டனை பெற்றவர்கள், விசாரணை கைதிகள் மற்றும் பெண் கைதிகள் ஆகியோர் உள்ளனர். தண்டனை குற்றவாளிகள் 700 பேர் முதல் பிரிவிலும், விசாரணை கைதிகள் 1500 பேர் இன்னொரு பிரிவிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 160 பெண்கள் இன்னொரு இடத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10.30 மணிக்கு புழல் சிறை அதிகாரிக்கு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசியவர் இன்னும் 30 நிமிடத்தில் புழல் சிறை வெடித்து தூள்தூளாகும், அங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது என மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து சிறை துறை அதிகாரிகள், சென்னை புறநகர் கமிஷ்னர் ஜாங்கிட்டுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவரது உத்தரவின் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் சகிதம் சிறை முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர்.
மறுநாள் அதிகாலை 2 மணி வரை நீடித்த இந்த சோதனையின் இறுதியில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அந்த போன் புரளி என்பது தெரியவந்தது. போலீஸ் போன் எண்ணை வைத்து பேசியது யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்.
சமீபத்தில் விபசார வழக்கில் கைதான நடிகை புவனேஸ்வரியும் இங்கு தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications