கூடங்குளம்-சிங்கப்பூர் கப்பல் விடுவிப்பு
தூத்துக்குடி: அனுமதியின்றி கூடங்குளம் அருகே இந்திய கடல் பகுதிக்குள் வந்த சிங்கப்பூர் சரக்கு கப்பலை விடுவிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இக்கப்பல் இன்று மாலை அல்லது நாளை காலை புறப்படும் என தெரிகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக கூடங்குளம் அருகே வெளிநாட்டு கப்பல் ஒன்று நின்று கொண்டிருக்கிறது. அதை இலங்கை ராணுவ கப்பல் என நினைத்த தமிழக மீனவர்கள் அரசுக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.
கூடங்குளம் அணுமின் உலை பகுதிக்கு அருகே நின்றதை அடுத்து போலீஸார் அந்த கப்பலை சுற்றி வளைத்தனர். அப்போது அந்த கப்பல் சிங்கப்பூரை சேர்ந்ததும் என்றும், சரக்கு கப்பல் என்பதும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
கடலோர காவல் படை டிஎஸ்பி மணிரத்னம், கடற்படை கமாண்டர் உத்தவ்சிங் மற்றும் காவல் படையினர் அக்கப்பலை தூத்துக்குடிக்கு கொண்டு சென்றனர். பின்னர் கப்பல் கேப்டன் அகஸ்டின் காகு உள்ளிட்ட ஊழியர்கள் 10 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து அந்த கப்பல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்று போனது உறுதி செய்யப்பட்டது. இதயைடுத்து அக்கப்பலை விடுவிக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
இந்நிலையில் தற்போது கப்பலில் ஏற்பட்ட தொழிலநுட்ப கோளாறை சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
இது குறித்து தூத்துக்குடி கடலோர காவல் படையை சேர்ந்த ஒருவர் கூறுகையில், கப்பல் இன்று மாலையோ அல்லது நாளை காலையோ புறப்பட்டு செல்லும் என்றார்.












Click it and Unblock the Notifications