இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை - காங்., பாஜக, தேமுதிக எதிர்ப்பு
சென்னை: ஈழத்தமிழர்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும். மாறாக இந்தியாவில் அவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை அளித்தால் அது ராஜபக்சேவுக்குத்தான் ஆனந்தமாகப் போகும் என்று காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் கூறி உள்ளார்.
இதேபோல பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளும் குடியுரிமை அளிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக சுதர்சன நாச்சியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை ..
இலங்கைத் தமிழர்களின் பிறப்புரிமையான யாழ்ப்பானம் தமிழர் பகுதியாக உருவாக்கப்படுவதை ஒவ்வொரு தமிழரின் லட்சியமாக இருக்க வேண்டும்.
ராஜராஜ சோழன், பல்லவர்கள் ஆட்சி காலங்களில் முல்லைத்தீவு வரை முழுமையான தமிழர்களின் பகுதியாக உருவாக்கப்பட்டதை வரலாற்றுச் சான்றுகள் எடுத்துச்சொல்லுகின்றன.
7 லட்சம் ஈழத்தமிழர்களில் சுமார் 2 லட்சம் பேர் தமிழகத்திலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர். மேலும் சுமார் 2 லட்சத்திற்கு மேல் உலகம் முழுவதும் குறிப்பாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளில் வாழ்கின்றனர்.
இம்மக்களின் சொத்துக்கள், வீடுகள், விவசாய நிலங்கள், வியாபாரம், தொழிற்கூடங்கள், கல்விக் கூடங்கள் போன்றவை அவர்களுடைய பொறுப்பிலேயே மீண்டும் நடத்தப்பட வேண்டும்.
இதில் எவ்வளவு மக்கள் யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வராமல் அவர்கள் இருக்கின்ற நாடுகளிலேயே வாழ்கிறார்களோ அந்த அளவிற்கு ராஜபக்சேவுக்கு மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகமாகும். அந்த அளவிற்கு சிங்களவர்களை ஈழப்பகுதிகளில் குடியமர்த்த முயற்சிப்பார்கள்.
இதை கவனமாக கொண்டு இலங்கையை விட்டு வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களில் வீட்டிற்கு ஒருவரேனும் ஈழ நாட்டிற்கு சென்று தமது உரிமையினை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் முழு முயற்சியுடன் இறங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தேமுதிக ஒருபோதும் ஏற்காது...
இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதை தேமுதிக ஒரு போதும் ஏற்று கொள்ளாது என அக்கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது இலங்கையில் நடைபெறும் இனவெறி கொள்கைகளை நாமே நிறைவேற்றி வைப்பதைப்போல் ஆகிவிடும்.
தஞ்சம் புகுந்துள்ள தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க சிந்திப்பது சிங்களவரிடம் இந்தியாவும், தமிழகமும் சரணடைய செய்யும் முயற்சிதான். தேமுதிக இதை ஒருபோதும் ஏற்காது என்றார்.
சோனியாவுக்கு தமிழர்கள் மீது வெறுப்பு...
சென்னையில் நடந்த பாஜக கூட்டத்தில் அக்கட்சி தலைவர் ராஜா பேசுகையில்,
இலங்கையின் பூர்வீக இனமான தமிழர்களை அந்த நாட்டிலேயே பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலையை மத்திய, மாநில அரசுகள் அமைத்துத் தர வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கடந்த 10 மாதங்களாகத் தாக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருப்பது முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல உள்ளது.
சோனியா காந்திக்கு தமிழர்கள் மீதுள்ள வெறுப்பு காரணமாகவே, இலங்கைக்கு, மத்திய அரசு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது.
இலங்கையில் மின் முள்வேலிக்குள் அடைபட்டிருக்கும் தமிழர்களின் நிலை குறித்து அறிய பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பி. குழுவை மத்திய அரசு இலங்கைக்கு அனுப்ப வேண்டும். இலங்கைத் துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை வெளியேற்ற வேண்டும். தமிழக மீனவர்கள் பாதுகாப்பு கருதி கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும்.
இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை தன் கைவசம் வைத்துக் கொண்டு இந்தியாவுக்குள் சீனா அடிக்கடி ஊடுருவி வருகிறது. ஆனால் மத்திய அரசோ கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிக ஊடுருவல் குறைந்துவிட்டதாக கருத்துத் தெரிவித்துள்ளது. இதை கண்டிக்கிறோம் என்றார்.