வாக்காளர்களை ஈர்க்க வாஜ்பாயை விட்டு கோரிக்கை விடும் பாஜக
டெல்லி: உட்கட்சி்ப் பூசலால் துவண்டு போயிருக்கும் கட்சியை தூக்கி நிறுத்தும் வகையிலும், மூன்று மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்கு கோரிக்கை விடும் வகையிலும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மூலமாக கோரிக்கை ஒன்றை விடுக்கவுள்ளது பாஜக.
வாஜ்பாய் என்றைக்கு தீவிர அரசியலிலிருந்து விலகினாரோ அன்று முதலே பாஜகவுக்கு தேய் பிறையாகி விட்டது. லோக்சபா தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்தது ஒரு பக்கம் என்றால், உட்கட்சிப் பூசல் மறுபக்கம் மண்டையைப் பிளந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மூலம் மகாராஷ்டிரா, ஹரியானா, அருணாச்சல் பிரதேச வாக்காளர்களுக்கு பாஜகவுக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை வைக்கவுள்ளது பாஜக. இன்று வாஜ்பாயியின் கோரிக்கை வெளியாகும் என்று தெரிகிறது.
இதுகுறித்து பாஜக தேர்தல் பொறுப்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், மகாராஷ்டிரா, ஹரியானா, அருணாச்சல் பிரதேச வாக்காளர்களுக்கு பாஜக சார்பில் நாளை (இன்று) கோரிக்கை விடுப்பார் வாஜ்பாய். இதுதொடர்பாக நானும், செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கரும் வாஜ்பாயை சந்தித்துப் பேசுகிறோம்.
எந்த வகையில் வாஜ்பாயியின் கோரிக்கை இருக்கும் என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது. இருப்பினும் வாஜ்பாய் கடிதம் மூலமாக கோரிக்கை விடுக்கக் கூடும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications