எஸ்.ஏ.ராஜாவுக்கு மருத்துவ பரிசோதனை-சுப்ரீம் கோர்ட் உத்தரவு
திருநெல்வேலி: ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் எஸ்.ஏ. ராஜாவுக்கு உடல் பரிசோதனை நடத்தி வரும் 9ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் வடக்கன்குளம் கல்வி நிறுவன தலைவர் எஸ்ஏ ராஜா உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து எஸ்ஏ ராஜா பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவரை அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரு வாரம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் எஸ்ஏ ராஜா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், எனக்கு உடல் நிலை சரியில்லை. ஆஸ்துமா மற்றும் இதய நோயால் சிரமப்பட்டு வருகிறேன். தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க எனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச நேற்று வி்சாரணை செய்தது. பின்னர் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறுகையில்,
எஸ்ஏ ராஜா உடல் நிலை குறித்து நெல்லை மாவட்ட அரசு இதயவியல் நிபுணர், திருநெல்வேலி மருத்துவ கல்லூரி இதயவியல் நிபுணர், திருநெல்வேலி கேலக்ஸி மருத்துவமனை இருதயவியல் நிபுணர் ஆகியோர் பரிசோதனை செய்து வரும் 9ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.