வாழ சிறந்த நாடு-நார்வே; மோசமான நாடு-நைஜர்: இந்தியாவுக்கு 134வது இடம்!
ஐ.நா. வளர்ச்சித் திட்டம் சார்பில் இதுதொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் உலக மக்களால் வாழ்வதற்கு சிறந்த நாடாக நார்வே கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான நாடாக நைஜர் உள்ளது.
உள்நாட்டுப் போர் மற்றும் எய்ட்ஸ் நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடு நைஜர் என்பது குறிப்பிடத்தக்கது.
நார்வேக்கு அடுத்து, வாழ்வதற்கு சிறந்த நாடுகளாக ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து ஆகியவை வருகின்றன.
மோசமான நாடுகளின் பட்டியலில் நைஜருடன் ஆப்கானிஸ்தான், சியாரா லியோன் ஆகியவை உள்ளன.
இந்தியாவுக்கு இப்பட்டியலில் 134வது இடம் கிடைத்துள்ளது.
ஜிடிபி, கல்வி, வாழ்க்கைத் தரம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொகுப்புப் பட்டியலை ஐ.நா. வெளியிட்டுள்ளது.
நைஜர் நாட்டில் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு டாலர் சம்பாதித்தால், அது நார்வே நாட்டில் 85 டாலர்களாக உள்ளன.
பரம ஏழைகள் என அழைக்கப்படும் 24 நாடுகளில் உள்ள பாதிக்கும் மேற்பட்டோர் கல்வி அறிவு அற்றவர்களாக உள்ளனர்.
உலகிலேயே அதிக நாட்கள் உயிர் வாழ்வோர் அதிகம் உள்ள நாடாக ஜப்பான் உள்ளது. இங்கு சராசரி ஆயுள் காலம் 82.7 ஆண்டுகளாக உள்ளது. இதுவே ஆப்கானிஸ்தானில் 43.6 ஆண்டுகளாக உள்ளது.
லிச்டென்ஸ்டீன், அதிக அளவிலான ஜிடிபியைக் கொண்டுள்ளது. இங்கு ஜிடிபியின் அளவு 85,383 டாலர்களாக உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட பணக்கார நிறுவனங்கள் உள்ளன.
அதிக அளவிலான ஏழைகளைக் கொண்ட நாடாக காங்கோ உள்ளது. இங்கு ஒரு தனி நபரின் வருடாந்திர சராசரி வருமானம் 298 டாலர்களாக (சராசரியாக 15 ஆயிரம் ரூபாய்) உள்ளது.
சீனா, வெனிசூலா, பெரு, கொலம்பியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடந்த ஆண்டு பெற்ற ரேங்கிங்கிலிருந்து 3க்கும் மேற்பட்ட இடங்கள் வரை உயர்ந்துள்ளன.
சீனா, கொலம்பியா, வெனிசூலாவில் கல்வி அறிவு மேம்பட்டுள்ளதால், பிற வளர்ச்சிகளும் அந்த நாடுகளில் அதிகரித்துள்ளனவாம்.
உலக அளவில் கடந்த 1980ம் ஆண்டிலிருந்து மனித முன்னேற்றம் 15 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதாம். அதில் சீனா, ஈரான், நேபாளம் ஆகியவை முன்னணியில் உள்ளன என்கிறது ஐ.நா.வின் இந்த ஆய்வுப் பட்டியல்.