தலாய் லாமாவுடன் சந்திப்பு-ஒத்திவைத்த ஒபாமா
வாஷி்ங்டன்: அதிபர் ஒபாமா மற்றும் திபெத் தலைவர் தலாய் லாமாவின் சந்திப்பை ஒத்திவைக்கும் முடிவுக்கு அமெரிக்க அரசு வந்துள்ளது. அடுத்த மாதம் சீன அதிபர் ஹூ ஜின்டா அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சமயத்தில் இந்த சந்திப்பு வேண்டாம் என அமெரிக்க அரசு கருதுகிறதாம்.
திபெத்திய மத தலைவரான தலாய் லாமா கடந்த 1959ம் ஆண்டு சீனாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி, நாட்டைவிட்டு வெளியேறினர். அவர் தற்போது சீன ஆக்ரமிப்பில் இருந்து திபெத்தை மீட்க உலக மக்களிடம் ஆதரவு கோரி வருகிறார்.
கடந்த 1991ம் ஆண்டுக்கு பின்னர் இதுவரை 10 முறைக்கும் மேல் தலாய் லாமா, அமெரிக்காவின் பல அதிபர்களை சந்தித்திருக்கிறார். தற்போது இந்த சந்திப்பை அமெரிக்க அரசு ஒத்தி போட்டிருப்பதால், அவர் சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக வாஷிங்டன் சென்று அதிபரை சந்திக்காமல் திரும்ப இருக்கிறார்.
கடைசியாக தலாய் லாமா கடந்த 2007ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்தித்து, காங்கிரஸின் உயரிய விருதான தங்க பதக்கத்தை பெற்று கொண்டார்.
ஆனால், இது நடந்து இரண்டு ஆண்டுகள் முடிவதற்குள் அவரது சந்திப்பை அமெரிக்கா ஒத்திவைத்துள்ளது. அடுத்த மாதம் சீன அதிபர் ஹூ ஜின்டா அமெரிக்க வரும் சமயத்தில், புதிய ஒப்பந்தங்களில் அமெரிக்கா கையெழுத்திட இருக்கிறது.
ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் இது போன்ற சந்திப்புகளால் சீனாவுடனான வர்த்தகத்தை கெடுத்து கொள்ள வேண்டாம் என அமெரிக்கா விரும்புகிறது.
மேலும், ஆசிய சூப்பர் பவராக உருவாகி வரும் சீனாவுக்கு எதிராக தாங்கள் செயல்பட விரும்பவில்லை என்பதை அவர்களுக்கு தெரிவிக்கும் நோக்கத்தில் அமெரிக்கா இதை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் சீனாவில் இருக்கும் மனித உரிமை மீறல்கள், தங்களது பணத்தின் மதிப்பை சீனா ஏற்றுமதிக்காக செயற்கையாக மாற்றுகிறது போன்றவற்றை குற்றச்சாட்டுக்களை வீசுவதையும் நிறுத்திவிட்டது. மேலும், சர்வதேச அளவில் உள்ள ஐஎம்எப் போன்ற நிறுவனங்களில் சீனாவுக்கு சிறப்பான அந்தஸ்து அளிக்க தயாராகி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில்,
வட கொரியா, ஈரான் போன்ற நாடுகளின் அணு ஆயுத திட்டம் மற்றும் முக்கிய பிரச்சனைகள் குறித்து சீனாவுடன் பேசவிருக்கிறோம். தலாய் லாமா, ஒபாமா சந்திப்பு இந்த மாதம் நடைபெறாது. இந்த சந்திப்பு டிசம்பரில் நடக்கும் என்றார்.
இந்த விவகாரம் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிய தூதரகத்தை சேர்ந்த ஒரு அதிகாரி கூறுகையில்,
சீனாவுடன் ஒரே சமயத்தில் நிறைய பிரச்சனைகள் தொடர்பாக பேச வேண்டாம் என அமெரிக்கா நினைக்கிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே உருவாகி வரும் சுமூக உறவு பலவீனமாகிவிடும் என அமெரிக்கா கருதுகிறது.
இந்த முடிவுகளால் அமெரிக்கா, சீனாவுக்கு வளைந்து கொடுக்கிறதா அல்லது அவர்களை வளைத்து பிடிக்க முயல்கிறதா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், வரும் டிசம்பரில் நடக்கவிருக்கும் ஒபாமாவின் அமெரிக்க பயணத்துக்கு முன்பாக, அவர் நிச்சயம் தலாய் லாமாவை சந்திக்க மாட்டார் என்றார்.












Click it and Unblock the Notifications