For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாலிபான்களை இந்தியாவுக்கு அனுப்பும் ஐஎஸ்ஐ!

Google Oneindia Tamil News

டெல்லி: சரணடைந்த தாலிபான்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இந்தியாவில் நாசவேலைகள் செய்யும்படி உத்தரவிட்டு வருகிறது. அதற்கு மறுக்கும் தாலிபான்களை சிறையில் அடைத்து சித்ரவதை செய்வதாக மிரட்டி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்த தாலிபான் தீவிரவாதிகள் அமெரிக்க படையினரால் விரட்டப்பட்டு தற்போது பாகிஸ்தானின் தெற்கு வசிர்ஸ்தான் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

இவர்களை பாகிஸ்தான் ராணுவம் வேட்டையாடி வருகிறது. சண்டையின் போது சரணடையும் தாலிபான் தீவிரவாதிகளை ஐஎஸ்ஐ அமைப்பு இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது.

அவர்களை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்து காஷ்மீரில் நாசவேலைகளை நடத்த திட்டமிட்டுள்ளது. அப்படி செய்ய மறுக்கும் தீவிரவாதிகளை கொடுமையான சிறைச்சாலையில் அடைத்து விடுவோம் என மிரட்டுகிறது.

இந்நிலையில் இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து மத்திய கேபினட் செயலாளர் சந்திரசேகர், உள்துறைச் செயலாளர் ஜி.கே. பிள்ளை, பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளின் இரண்டு நாள் கூட்டம் ஸ்ரீநகரில் நடந்தது.

இந்நிலையி்ல் இந்திய எல்லைப்புற பாதுகாப்பு படையின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

தீவிரவாதிகளை ஊடுருவ வைக்கும் நோக்கத்தில் தான் சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவம், இந்திய படையை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஊடுருவல் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுவிட்டன. அப்போது காயத்துடன் பாகிஸ்தான் எல்லைக்கு திரும்பிய 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் மீட்டு சென்றதை நேரில் பார்த்தோம்.

பனி பொழிவின் போது ஊடுருவ திட்டம்...

ஆனால், அடுத்த 15 முதல் 20 நாட்கள் பாதுகாப்பு பணிகள் கடும் சவாலாக இருக்கும். அப்போது காஷ்மீரில் பனி பொழிவும், கடுங் குளிரும் இருக்கும் என்பதால் அந்த சமயத்தில் அதிகமான அளவில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பார்கள்.

தற்போது பாகிஸ்தான் 60 தாலிபான்களை ஊடுருவலுக்கு தயாராக வைத்திருக்கிறது. மேலும் 250 முதல் 300 பேர் வரை தீவிரவாத பயிற்சிகளை விரைவில் முடிக்கவிருக்கின்றனர்.

தீவிரவாதிகள் கையில் இந்திய சிம் கார்டு...

இவர்கள் அனைவரும் 42 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் தீவிரவாதிகளுக்கு பயங்கர ஆயுதங்கள், இந்திய மொபைல் சிம் கார்டுகள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்னும் சில நாட்களில் காஷ்மீர் பகுதியில் நாசவேலைகளை நடத்த அவர்கள் திட்டமிட்டிருப்பது தெளிவாகியுள்ளது. இதிலிருந்து தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் உதவி வருவது மீண்டும் ஒருமுறை வெட்டவெளிச்சமாகியுள்ளது. அவர்களது தாக்குதலை முறியடிக்க இந்திய படையினரும் தயாராக இருக்கின்றனர் என்றார்.

ஏற்கனவே பாகிஸ்தானில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா, இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையில் தற்போது தாலிபான்களும் இவ்வரிசையில் சேர்ந்திருப்பது பாதுகாப்பு படையினருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X