நக்சலைட்கள் சரணடைய வேண்டும்-ப.சிதம்பரம்

ஜார்க்கண்ட் மாநில இன்ஸ்பெக்டர் ஒருவரின் தலையைத் துண்டித்து நக்சலைட்டுகள் நடத்திய வெறியாட்டம் நாடு முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், நக்சலைட்டுகளுடனான சண்டையை போர் என்று கூற முடியாது. நக்சலைட்டுகள் வன்முறையை நம்புகிறார்கள். போர், போர் ஆயத்தம் என்று அவர்கள்தான் கூறி வருகிறார்கள். நாங்கள் இதை போராக கருதவில்லை.
நமது நாடு நாகரீகமடைந்த ஒரு நாடு. நாம் நமது மக்கள் மீதே போர் புரிவதில் நம்பிக்கை இல்லாதவர்கள். மாவோயிஸ்டுகளும் நமது மக்கள்தான். ஆனால் அவர்கள் வன்முறையைக் கைவிட வேண்டும். ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். அவர்களது அட்டகாசத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களை வளர அனுமதிக்க வேண்டும்.
வன்முறை கைவிடப்படாவிட்டால் அங்கு எந்த வளர்ச்சியையும் காண முடியாது. ஜனநாயகத்தில் வன்முறையை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அங்கு வன்முறைக்கு இடமே இல்லை.
அரசியல் சாசனச் சட்டப்படி பதவியேற்றுக் கொண்ட ஒரு அரசு, எந்தவிதமான ஆயுத போராட்டத்தையும் ஏற்க முடியாது.
எனவே மாவோயிஸ்டுகளை பிடிக்க வேண்டும் என்று படையினருக்கு உத்தரவிடுவது மட்டுமே எங்கள் முன்பு உள்ள ஒரு வழி. நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் விடக் கூடாது, பிடிக்க வேண்டும். கடந்த 10 முதல் 12 ஆண்டுகளுக்குள் மிகப் பெரிய தொல்லையாக அவர்கள் மாறியுள்ளனர். நக்சலைட்டுகள் சரணடையாவிட்டால் அவர்களை பாதுகாப்புப் படையினர் வேட்டையாடிப் பிடிப்பார்கள்.
மாவோயிஸ்டுகளுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி வருவது இல்லை. அதற்கான ஆதாரம் இல்லை. உள் நாட்டுக்குள்ளேயே தங்களுக்குத் தேவையான ஆயுதங்களையும், நிதியையும் அவர்கள் திரட்டிக் கொள்கின்றனர். வங்கிகளைக் கொள்ளையடிக்கின்றனர், கடத்துகின்றனர், மிரட்டிப் பணம் பறிக்கின்றனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications