மாணவி தற்கொலையில் மர்மம்-தந்தை புகார்!

கோவை மாவட்டம் வால்பாறையில் எஸ்டேட் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வரும் சார்லசின் மகள் செல்வியா மேரி (16).
திருவண்ணாமலையில் 10ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு கன்னியாஸ்திரியாக ஆகும் ஆசையில் சென்னை எருக்கஞ்சேரி எத்திராஜ் சாலையில் கன்னியாஸ்திரிகள் மடம் நடத்தி வரும் பள்ளியில் பிளஸ்1 படிப்பில் சேர்ந்தார்.
பள்ளி அருகே உள்ள திருவள்ளுவர் நகரில் சோனியா மேரி உள்ளிட்ட சில மாணவிகளுடன் தங்கி இருந்தார். இரவில் இந்த மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் தூங்குவது வழக்கம்.
இந்நிலையில் செல்வியா மேரி நேற்று காலை பள்ளி வளாகத்தில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
இந் நிலையில் அவரது தந்தை சார்லஸ் இன்று கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில், கன்னியாஸ்திரிகள் எனக்கு நேற்று காலை 8.10 மணிக்கு போன் செய்து, நீங்கள் உடனடியாக சென்னைக்கு புறப்பட்டு வாருங்கள் என்று கூறினார்கள்.
நானும் அவர்கள் அவசரமாக அழைக்கிறார்களே என்பதால் உடனே இங்கு வந்தேன். இங்கு என் மகள் தூக்கு போட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
என் மகள் நேற்று காலை 6 மணிக்கே இறந்து விட்டதாக அவருடன் தங்கி இருந்த மாணவிகள் சொல்கிறார்கள். ஆனால், கன்னியாஸ்திரிகள் எனக்கு 8.10 மணிக்குதான் போன் செய்து இங்கு வருமாறு கூறினார்கள். என் மகள் சாவில் நிறைய மர்மங்கள் இருக்கி்ன்றன.
எனவே உரிய விசாரணை நடத்தி என் மகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
செல்வியா மேரியுடன் தங்கி படித்து வந்த மாணவியான சோனியா மேரி போலீசாரிடம் கூறுகையில், நேற்று காலை 5 மணிக்கு நான் எழுந்து விட்டேன். அப்போது செல்யா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவரை எழுப்பிவிட்டு நான் வீட்டுக்குச் சென்று விட்டேன். அதன் பிறகு அவர் தூக்கில் தொங்கியுள்ளார் என்று கூறியுள்ளார்.
செல்வியா மேரியின் பிரேத பரிசோதனை இன்று ஸ்டான்லி மருத்துவமனையில் நடக்கிறது.
மாணவியின் கடிதம் சிக்கியதா?:
தனியாக வீடு பிடித்து தங்கியிருந்தாலும், மடத்தில் உள்ள கன்னியாஸ்திரிகளுக்கு சமையல் செய்து கொடுத்து அவர்களுடன் செல்வியா மேரி தங்கி படித்து வந்திருக்கிறார். அவருக்கு ஆங்கில அறிவு குறைவு என்பதால் சில கன்னியாஸ்திரிகள் அவரை கொத்தடிமை போல நடத்தியதாகத் தெரிகிறது..
இதனால் மனமுடைந்த செல்வியா மேரி தனக்கு இங்கு பெரும் கொடுமை நடப்பதாகவும், கேவலமான முறையில் தன்னை நடத்துவதாகவும் கூறி, கன்னியாஸ்திரியாகும் ஆசையே போய் விட்டதாகவும், உடனடியாக தன்னை வந்து இங்கிருந்து கூட்டிச் செல்ல வேண்டும் என்றும் கூறி தனது தாயார் ஜாய்க்கு கடிதம் எழுதியதாகத் தெரிகிறது.
அதே போல கொடுங்கையூர் போலீசார் செல்வியா மேரி தங்கியிருந்த அறையை சோதனையிட்டபோது அங்கும் ஒரு கடிதத்தை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. அதில் மேலே கூறிய தகவல்களை குறிப்பிட்டு தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்று எழுதியிருந்ததாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications