அடுத்த லோக்சபா தேர்தலின்போது அத்வானி இடம் பெற மாட்டார் - நாயுடு
அந்தத் தேர்தலில் அத்வானி பிரசாரத்திலும் பங்கேற்க மாட்டார், தேர்தலிலும் போட்டியிட மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் அத்வானி விரைவில் அரசியலிருந்து ஓய்வு பெறப் போவது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அடுத்த தேர்தலில் அத்வானி போட்டியிட மாட்டார். அவரது தலைமையில் நாங்கள் அடுத்த தேர்தலை சந்திக்கப் போவதில்லை.
அந்த சமயத்தில் பாஜகவுக்கு புதிய தலைவர் கிடைத்திருப்பார். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் புதிய தலைவரை பாஜக தேர்ந்தெடுத்திருக்கும். அது சாத்தியமானதுதான்.
நேரம், காலம், சூழ்நிலைக்கேற்ப புதிய தலைவர் யார் என்பதை அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுப்பது வழக்கம். அது பாஜகவுக்கும் பொருந்தும்.
நடப்பு லோக்சபாவுக்கான எதிர்க்கட்சித் தலைவராக அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். அடுத்த தலைவருக்கு எப்போது வழி விடுவது என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். எப்போது விலக வேண்டும் என்பதும் அவரது உரிமையாகும். இதில் யாரும் அவருக்கு கெடு விதிக்க முடியாது.
பாஜக நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக அத்வானி நீடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஒரு கட்சி தொடர்ந்து 2வது முறையாக தோல்வியைச் சந்தித்தால் கட்சியில் தடுமாற்றம் ஏற்படுவது இயல்புதான். எனவேதான் மூத்த தலைவரான அத்வானி இருந்து வழி காட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். இதனால்தான் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியை அவர் ஏற்க வேண்டும் என வற்புறுத்தினோம். இது பெரிய விஷயமில்லை.
ஜஸ்வந்த் சிங் நீக்கத்தை அத்வானி விரும்பவில்லை. ஆரம்பத்தில் அதை எதிர்க்கவே செய்தார். இருப்பினும் ஜஸ்வந்த் சிங் எழுதிய நூலில் நிறைய ஆட்சேபகரமான தகவல்கள் இருந்ததால் கட்சி அவர் மீது நடவடிக்கை எடுத்தது. கட்சியின் உத்தரவை அத்வானியும் ஏற்றுக் கொண்டார் என்றார் நாயுடு.