சேலம் அருகே மண்ணுளி பாம்பு கடத்திய 5 பேர் கைது!
சேலம்: சேலம் அருகே மண்ணுளி பாம்புகளை கடத்தி விற்க முயன்ற 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் தலைவாசல் அருகே உள்ள பகுதியில் இருந்து தங்கமணி, சடையப்பன், ராஜசேகர் ஆகியோர் மண்ணுளி பாம்புகளை விற்க பெங்களூருவை சேர்ந்த சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததை அடுத்து அவர்கள் பெங்களூருவைச் சேர்ந்த இரு நபர்களுடன் ஆத்தூர் வந்தனர். அங்கு அவர்களிடம் ரூ. 50 ஆயிரம் பெற்று கொண்டு மண்ணுளி பாம்புகளை விற்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் 5 பேரும் காரில் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வனப்பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். அதில் காரில் மண்ணூளி பாம்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்தனர். பெங்களூரை சேர்ந்த இரு இளைஞர்களும் கல்லூரியில் படித்து வருவதாகவும், அவர்கள் இந்த மண்ணூளி பாம்பை வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக வாங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.