நாளை வருகிறார் ஜெ. - 58 அதிமுக குடும்பங்களுக்கு ரூ. 17 லட்சம் நிதி அளிக்கிறார்

மக்களவை தேர்தல் முடிவுக்கு பின்னர் கொட நாடு சென்ற ஜெயலலிதா சுமார் 5 மாதத்துக்கு பின் முதன் முறையாக நாளை சென்னை வருகிறார்.
வரும் 12ம் தேதி அதிமுக தலைமை செயலகத்தில் நடக்கும் விழாவில் அவர் கலந்து கொண்டு அதிமுக குடும்பத்தினருக்கு உதவி தொகை வழங்குகிறார்.
இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
அதிமுகவின் துவக்க விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அதிமுக தொண்டர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் அண்ணா தொழிற் சங்கப் பேரவை உறுப்பினர்களில் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் நலிந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் அரசியல் எதிரிகளாலும், சமூக விரோதிகளாலும் படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்த மற்றும் விபத்துக்குள்ளாகி அகால மரணமடைந்த 12 அதிமுகவினர்களின் குடும்பங்கள் மற்றும் அதிமுக தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள 46 நலிந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு என ஆக மொத்தம் 58 குடும்பத்துக்கு ரூ. 17.5 லடசம் நிதி உதவி வழங்கப்படும்.
இதை வரும் 12.10.09 அன்று மதியம் 2 மணிக்கு சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜெயலலிதா வழங்குகிறார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா சென்னை திரும்புவதைத் தொடர்ந்து அதிமுக வட்டாரம் சுறுசுறுப்படைந்துள்ளது. அதிமுக தலைமைக் கழகத்தில் தடபுடலான வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications