என்.எல்.சி. தொழிலாளர் ஸ்டிரைக் தொடங்கியது
நெய்வேலி: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிரந்தரத் தொழிலாளர்கள் நேற்று இரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
போனஸ் மற்றும் ஊக்கத் தொடர்பாக என்எல்சி நிரந்தரத் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையிலான 2 சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது.
இதையடுத்து தொமுச மற்றும் பாட்டாளி தொழிற்சங்கம் ஆகியவை ஸ்டிரைக் அறிவித்தன. அவர்களுடன் மேலும் 11 தொழிற்சங்கங்களும் போராட்டத்தை அறிவித்தன.
இந்த நிலையில் நேற்று மாலை மண்டல தொழிலாளர் நல ஆணையர் முரளி முன்னிலையில் பேச்சு நடந்தது. என்எல்சி தரப்பில் முதன்மை பொதுமேலாளர் லூர்தஸ், கூடுதல் முதன்மை மேலாளர் அறிவு ஆகியோரும், தொமுச தரப்பில் தலைவர் வீரராமச்சந்திரன், பொதுச்செயலாளர் கோபாலன், பொருளாளர் ரகுராமன், அலுவலக செயலாளர் காத்தவராயன் ஆகியோரும், பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் தலைவர் பெருமாள், செயலாளர் திலகர், பொருளாளர் மோனிகா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதில் ரூ. 52,000 வரை வழங்க நிர்வாகம் முன்வந்தது. இதை ஏற்க தொழிற்சங்கங்கள் மறுத்துவிட்டு பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறினர்.
இதையடுத்து தொமுச அலுவலக வளாகத்தில் வேலை நிறுத்த அறிவிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் தொடங்கும் என தொமுச பொதுச்செயலாளர் கோபாலன் அறிவித்தார்.
இதைதொடர்ந்து நேற்று இரவு 10 மணிக்கு வேலை நிறுத்தம் தொடங்கியது. நிரந்தர தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒப்பந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
ஒட்டுமொத்த ஊழியர்களும் ஸ்டிரைக்கில் குதித்துள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. என்எல்சி வளாகத்தில் போலீஸார் குவிக்ப்பட்டுள்ளனர்.