கருணாநிதியுடன் சரத்குமார், ஷகீலா, மும்தாஜ், நளினி, ராதிகா சந்திப்பு
விபச்சார வழக்கில் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரி, விபச்சாரத்தில் ஈடுபடும் பெரிய நடிகைகள் பற்றி போலீசாரிடம் வெளியிட்டதாகக் கூறப்பட்ட பட்டியலை தமிழ் தினசரி படங்களுடன் வெளியிட்டது.
ஆனால் சென்னை போலீஸ் இப்படி ஒரு பட்டியலை நாங்கள் யாருக்கும் தரவில்லை என்று கூறி விட்டதால், பொய்ச் செய்தியை அப் பத்திரிகை வெளியிட்டதாகக் கூறி, அந்தப் பத்திரிகை மீது நடவடிக்கை கோரியது நடிகர் சங்கம்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி.
இந்த புகாரின் பேரில் தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்டார். வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவர் 15 நாள் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைக்காக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று கூறியிருந்தார். நடிகர் சரத்குமாரும் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சரத் குமார் தலைமையில் நடிகர், நடிகைகள் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து, அவரது ஆறுதலான ஆதரவான நடவடிக்கைக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.
இந்தக் குழுவில் சரத்குமாருடன் நடிகைகள் ஷகிலா, ராதிகா, மும்தாஜ், நளினி, நடிகர்கள் விஜய்குமார், சூர்யா, சத்யராஜ் இடம் பெற்றிருந்தனர்.
முதல்வரிடம் ஒவ்வொருவரும் தனித்தனியாக நன்றி தெரிவித்துப் பேசினர்.