பிரதீபா மகனை எதிர்த்துப் போட்டியிட்ட அமைச்சர் டிஸ்மிஸ்
அம்ராவதி: மகாராஷ்டிர மாநிலம் அம்ராவதி தொகுதியில் போட்டியிடும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் மகன் ராஜேந்திர சிங் ஷெகாவத்தை எதிர்த்துப் போட்டியிடும் அமைச்சர் சுனில் தேஷ்முக் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் அம்ராவதி தொகுதியில் போட்டியிட சுனில் தேஷ்முக் சீட் கேட்டிருந்தார். இவர் தற்போது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.
ஆனால் இவருக்கு சீட் மறுத்த காங்கிரஸ் மேலிடம், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் மகன் ராஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு சீட் கொடுத்தது.
அரசியல் அனுபவமே இல்லாத ஷெகாவத்துக்கு சீட் கொடுத்ததால் கோபமடைந்தார் சுனில். அம்ராவதி தொகுதியில் சுயேச்சையாக அவர் போட்டியிடுகிறார்.
இதனால் ஷெகாவத்தின் வெற்றி வாய்ப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. சுனிலை போட்டியிலிருந்து வாபஸ் பெறுமாறு கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டது. ஆனால் அவர் மறுத்து விட்டார்.
இந்த நிலையில் சுனில் தேஷ்முக் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். அவருடன், மேயர் அசோக் டோங்க்ரே, முன்னாள் மேயர் மிலிந்த் சிமோட் ஆகியோரும் கட்சியை விட்டு தூக்கப்பட்டுள்ளனர். இதனால் அம்ராவதி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறுவது மேலும் சிக்கலாகியுள்ளது.
சுனில் தேஷ்முக்குக்கு ஆதரவாக பல கவுன்சிலர்கள் களம் இறங்கிப் பிரசாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications