தமிழக ராணுவ அதிகாரியை சுட்டுக் கொன்ற வீரர்
லக்னோ: உ.பி. மாவட்டம் கான்பூரில், விடுமுறை கொடுக்காததால் கோபமடைந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர், தனது மேலதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். கொல்லப்பட்ட அதிகாரி தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
கான்பூர் அருகே உள்ள பங்கி என்ற இடத்தில் கான்பூர் புரூப் ரேஞ்ச் உள்ளது. இங்குதான் கான்பூர் துப்பாக்கித் தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் சோதிக்கப்படும் என்புத குறிப்பிடத்தக்கது.
இங்கு பாதுகாப்பு சேவைப் பிரிவில் சிப்பாய் ஆக இருப்பவர் குப்தேஷ்வர். இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் லேன்ஸ் நாயக் ஜி.கஜேந்திரனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டார்.
இதுகுறித்து கூடுதல் எஸ்.பி. லால் பகதூர் கூறுகையில், விடுமுறையில் செல்ல விரும்பி தனது உயர் அதிகாரியான லேன்ஸ் நாயக் கஜேந்திரனிடம் விண்ணப்பித்துள்ளார் குப்தேஷ்வர். ஆனால் கஜேந்திரன் விடுமுறை தரவில்லை. இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த குப்தேஷ்வர் தனது சர்வீஸ் ரைபிளை எடுத்து கஜேந்திரனை சுட்டு விட்டார். மொத்தம் ஐந்து முறை கஜேந்திரனை சுட்டுள்ளார் குப்தேஷ்வர். இதில் குண்டு பாய்ந்த கஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து போனார்.
குப்தேஷ்வர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை பணியில் சேர வந்த இன்னொரு வீரர் வந்த பிறகுதான் குப்தேஷ்வர் செய்த காரியம் வெளிச்சத்திற்கு வந்தது. தான் கஜேந்திரனை சுட்டுக் கொன்று விட்டதாக பணிக்கு வந்த வீரரிடம் குப்தேஷ்வரே கூறினார் என்று கூறினார்.
5 பேரை பிடித்த தீவிரவாதி சுட்டுக் கொலை..
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு ராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் விரைந்தனர்.
இதையடுத்து தப்பி ஓடிய அந்த தீவிரவாதி, அப்பகுதியில் உள்ள முகம்மது பட் என்பவரின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ஐந்து பேரை பிணைக் கைதிகளாக பிடித்துக் கொண்டான்.
தான் வெளியே போக அனுமதிக்காவிட்டால் இவர்களை சுட்டு விடுவேன் என்று மிரட்டினான். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அவனைப் பிடிக்க முயற்சித்தனர். அப்போது அந்த தீவிரவாதி பாதுகாப்புப் படையினரை சுட்டான்.
இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. விடிய விடிய நடந்த இந்த சண்டையில் இன்று காலை அந்த தீவிரவாதியை பாதுகாப்பு் படையினர் சுட்டுக் கொன்றனர்.
அவனது பிடியில் இருந்த ஐந்து பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவனிடமிருந்து 2 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், 2 கை எறி குண்டுகள், கண்ணி வெடிகள் கைப்பற்றப்பட்டன.
விசாரணையில் அவன் லியாகத்அலி குஜ்ஜார் என்று தெரிய வந்தது. ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த இவன் ஒரு பிரிவின் தளபதியாக செயல்பட்டு வந்தான்.