எஸ்.எம்.எஸ் மூலம் மோசடி-நைஜீரியக் கும்பல் மீது குவியும் புகார்

கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் உங்களுக்கு கோடிக்கணக்கில் பரிசு விழுந்துள்ளது. அந்த பரிசுத் தொகையைப் பெற ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால்போதும். மேலும், தொடர்புக்கு இ-மெயில் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை நம்பி பல பேர் கேட்ட தொகையை வங்கியில் செலுத்தி உள்ளனர். ஆனால், பரிசுத் தொகை எதுவும் வரவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் கோவை வந்த நைஜீரியா இளைஞர் ஜூடியை போலீசார் கடந்த வியாழக்கிழமை அன்று கைது செய்தனர்.
இந்த நிலையில், போலீசார் விசாரணையில், அவர் மும்பையில் உள்ள நைஜீரிய கும்பலைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்தது.
இதற்கிடையே, காரமடை அருகே மருதூரைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் மாநகரக் குற்றப்பிரிவில் வெள்ளிக்கிழமை புகார் கொடுத்துள்ளார்.
அதில், தனக்கு வந்த எஸ்எம்எஸ்-ல் 7.5 லட்சம் பவுண்ட் பரிசு விழுந்ததாகவும், அதற்கு ரூ.45 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும் என தகவல் வந்தது. இதை நம்பி, பணத்தை வங்கியில் செலுத்தினேன். ஆனால், பரிசுத் தொகை கொடுக்காமல் நைஜீரிய கும்பல் மோசடி செய்தது என்று புகார் தெரிவித்துள்ளார்..
அதே போன்று, நீலிக்கோணாம்பாளையம் நேதாஜி புதூரைச் சேர்ந்தவர் காளிதாஸ், அளித்த புகாரில் எனக்கு 3 லட்சம் பவுண்ட் பரிசு விழுந்ததாகவும் அதற்கு ரூ.27 ஆயிரம் செலுத்த வேண்டும் எனத் தகவல் வந்தது.
அப் பணத்தை வங்கியில் செலுத்தினேன். ஆனால், பரிசுத் தொகை கிடைக்கவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இது குறித்து மாநகரக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications